india

img

தேர்தல் பத்திரம்: கட்சிகளுக்கு நிதி தருவது யார் என அறியும் உரிமை மக்களுக்கு இல்லை: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி யார் தருகிறார்கள் என அறியும் உரிமை மக்களுக்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவதை தடை செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாஜக தலைமையிலான அரசு இந்த நன்கொடை வசூலை சட்டப்பூர்வமாக்கியுள்ளதோடு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு நிதி மசோதாவுடன் தேர்தல் பத்திரத்தை அறிமுகப்படுத்திய பாஜக கூட்டணி அரசு 2018-ஆம் ஆண்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தேர்தல் பத்திரங்களை வாங்க கருப்புப்பணத்தை பயன்படுத்துவதை அரசு கண்காணிக்கும் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு செய்யப்படவில்லை.பத்திரத்தை வாங்குபவரோ அல்லது பெறுபவரோ யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது என்பதால் நன்கொடையாளரின் அடையாளம் மறைக்கப்படுகிறது. இந்த முறை ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த தேர்தல் பத்திரங்கள் என்பவை நிதி மசோதா சார்ந்தது. லோக்சபா ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது.இதன் அம்சங்கள், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் 2019-இல் பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.நிலுவையில் இருந்த பொதுநலன் வழக்குகள் மீதான விசாரணை நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க இருக்கிறது.

இந்த வழக்கில் நாளை விசாரணை நடைபெறும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.அதில், தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குபவர்கள் யார் என்கிற விவரத்தை அறியக்கூடிய உரிமை பொதுமக்களுக்கு கிடையாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாராணைக்கு வரும் நிலையில், இப்படியான வாதத்தை ஒன்றிய அரசு முன்வைத்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.