india

img

அடுத்த நான்கு வாரங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.... கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை....

திருவனந்தபுரம்:
கொரோனா தொற்று குறித்து அடுத்த நான்கு வாரங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிலைமையை மதிப்பிடுவதற்காக சுகாதாரத் துறையின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனாகாலத்தில் மற்றொரு ஓணம் வந்தது. எல்லா நேரத்திலும் ஊரடங்கில் இருக்க முடியாது. அரசாங்கம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் ஒரே மாதிரியாக காப்பாற்ற முயற்சிக்கிறது. அதனால்தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளன. 

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. நிறைய பேர் அதை கடைப்பிடிப்பதை பார்க்க முடிந்தது. ஆனால் பல இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பங்கள் உள்ளன. மிகவும் விரைவாக பரவும் டெல்டா வைரஸால் பல பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ளன. மூன்றாவது அலையின் அச்சுறுத்தலும் உள்ளது. எனவே, ஓணத்திற்குப் பிறகு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களைத் திறக்கும்போது, அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.

மூன்றாவது அலைக்கு முன்னதாகவே சுகாதாரத் துறையினர் ஆயத்தங்களைத் தொடங்கிவிட்டனர். ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் ஐசியுக்கள் தாலுகா மட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அமைக்கப்படுகின்றன. வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பொது மருத்துவமனைகளின் ஐசியுக்கள் மருத்துவக் கல்லூரிகளுடன் ஆன்லைனில் இணைக்கப்படும். தடுப்பூசி இன்னும் போடாததால், மூன்றாவது அலையால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர். 490 ஆக்சிஜன் பொருத்தப்பட்ட குழந்தை படுக்கைகள், 158 எச்டியு படுக்கைகள், 96 ஐசியு உட்பட குழந்தைகளுக்காக மொத்தம் 744 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன.

ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. மாநிலத்தில் 870 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. கூடுதலாக, 290 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மருத்துவமனைகளில் சேமிக்கப்படுகிறது. 33 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் கூடுதலாக 77 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இவற்றில் 9 ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. பல்வேறு நிதியில் மாநில அரசால் 38 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி முறைகளை அரசு நிறுவியுள்ளது, ஒரு நாளைக்கு 13 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது.

முதியவர்களைப்போலவே குழந்தைகள் பாதிக்காதபடி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அது இயற்கையாகவே வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பரவுகிறது. எனவே தனிமைப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்குவது கட்டாயமாகும். முதுமை மற்றும் தொடர்புடைய நோய்கள் உள்ளவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொரோனா பரவுவதற்கு மூடிய பகுதிகளே காரணம். எனவே, நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சாப்பிடும் போதும், கைகளைக் கழுவும் போதும் கவனமாக இல்லாவிட்டால் நோய் பரவும்.

அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கி பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. தடுப்பூசி எடுத்துக்கொண்டதை நினைத்து யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. தடுப்பூசி எடுக்காவிட்டால், உருமாற்றமடைந்த டெல்டா வைரஸ் மேலும் பரவும் என்று சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எனவே, அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.

;