நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு அவரது மகள் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானதாக செய்திகள் பரவின.
நடப்பாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற ”கிளாடியா கோல்டின்” பெயரில் உள்ள ஒரு எக்ஸ் கணக்கில், அமர்த்தியா சென் காலமானதாக பதிவிடப்பட்டிருந்தது.
பின்னர் இந்த கணக்கு பொய்யானது என்றும் அமர்த்தியா சென் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், அமர்த்தியா சென்னின் மகள் நந்தனா சென் தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி.ஆனால் இது பொய்யான செய்தி. அப்பா நன்றாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு வாரத்தை நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக கழித்தோம். நேற்றிரவு நாங்கள் விடைபெறும் போது அப்பாவின் அணைப்பு எப்போதும்போல் வலுவாக இருந்தது. அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு 2 பாடப்பிரிவுகளுக்கு கற்பிக்கிறார்.அவர் எப்போதும் போல் பிஸியாக இருக்கிறார் என்று தந்தை அமர்த்தியா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார்.