கடந்த மூன்றாண்டுகளில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு 158 பேர் பலியாகியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு தொழிலாளர்கள் இறப்பது குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசு தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் சாக்கடைகள் அல்லது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு 158 பேர் இறந்துள்ளனர் என பதிலளித்தார்.
தற்போதும் கையால் மலம் அள்ளுவோர் இருக்கையில், தற்போது யாரும் கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடவில்லை என கூறினார்.
ஒன்றிய அரசு தரவுகளின்படி 2017 ஆம் ஆண்டு 93 பேரும், 2018-இல் 70 பேரும் , 2019-இல் 117 பேரும் பலியாகினர்.2020 மற்றும் 2021-இல் முறையே 19 மற்றும் 22 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அத்வாலே, கையால் துப்புரவு பணி செய்பவர்களாக வேலை செய்வதைத் தடை செய்வது மற்றும் அவர்களின் மறுவாழ்வு தொடர்பான திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை எனவும் குறிப்பிட்டார்.