ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு தில்லி வந்தடைந்தனர்.
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 13-ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ள இந்த சூழலில், ஈரானில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு, அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து விமானம் மூலம் தில்லி வந்தடைந்தனர். தெஹ்ரானில் உள்ள மற்ற இந்திய மாணவர்களும் விரைவில் நாடு திரும்ப உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் மிகவும் தாமதமானவை என்றும், போர் தொடங்கி 5 நாட்களுக்கு ஆகியும் 4000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஈரானில் இருக்கும் நிலையில், 110 மாணவர்களை மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான மீட்பு நட டிக்கைகள் எப்போது ஆரம்பமாகும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.