உச்சநீதிமன்றத்தில் “லாபடா லேடீஸ்” திரைப்படம் இன்று திரையிடப்பட உள்ளது
பாலின உணர்வுகளின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை உச்சநீதிமன்ற நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த முன்னெடுப்பை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் நிர்வாகக் கட்டிட வளாக அரங்கத்தில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் கிரண் ராவ் மற்றும் தயாரிப்பாளர் அமீர் கான் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட் ”உச்சநீதிமன்ற ஊழியர்களுக்கு பாலின உணர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என் முயற்சியால் இந்த திரையிடல் நடத்தப்படுகிறது. இந்த திரையிடல் ஊழியர்களுக்கு இடையிலான பிணைப்பை அதிகப்படுத்த உதவும்” என தெரிவித்தார்.
லாபடா லேடீஸ் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியன்று வெளியானது. இந்தப் படம், புதிதாக திருமணமான பெண்கள் இருவர் தங்கள் கணவர்களின் வீட்டிற்கு செல்லும் பயணத்தில் தவறுதலாக மாறிவிடுவர். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்கள் குறித்து நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் இப்படம் பேசுகிறது. இந்தப் படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.8 கோடி வரை வசூலித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. பின்னர் நெட்ஃபிளிக்சில் வெளியானபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.