india

img

மகளின் வன்கொலையை மூடிமறைக்க மம்தா அரசின் காவல்துறை பண பேரம்! கொல்கத்தா பெண் மருத்துவரின் தந்தை பரபரப்புக் குற்றச்சாட்டு

கொல்கத்தா, செப். 5 - கொல்கத்தாவில் பணியில் இருந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமான பாலியல் வன்கொலைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், பிரச்சனையை மூடி மறைப்பதற்காக கொல்கத்தா காவல்துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்த ரங்கு அறையில், 31 வயதான முது நிலை பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9 அன்று கொடூரமான முறை யில் பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டார். இந்தச் சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

பெண் மருத்துவர் பாலியல் வன்கொலையின் பின்னணி?

இந்த வழக்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சிபிஐ-யிடம்  ஒப்படைக்க கொல்கத்தா உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படை யில், சிபிஐ விசாரணைக்கு உத்தர விடப்பட்டு, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் முறை கேடாக மருந்துகளை ஏற்றுமதி செய்து, தரம் குறைவான மருந்து களை நோயாளிகளுக்கு அளித்த தாகவும், அதனை கண்டுபிடித்ததால் தான் மாணவி கொலை செய்யப் பட்டார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷூம், நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

இடதுசாரிகள்  மாபெரும் பேரணி

எனினும், இந்த விவகாரத்தில் ஆழமான விசாரணை நடத்தி, குற்ற வாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; மருத்துவர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தற்போது வரை  மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் இடது சாரிக் கட்சிகளும், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட இயக்கங் களும் செவ்வாயன்று மாபெரும் பேரணி நடத்தி கொல்கத்தாவை ஸ்தம்பிக்க வைத்தனர்.

இந்நிலையில் தான், கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதன் கிழமை இரவு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் பாலியல் வன்கொலைக்கு உள்ளான பெண் மருத்துவரின் பெற்றோரும் கலந்து கொண்டனர். 

பணத்தை வாங்க 
மறுத்துவிட்டோம்!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெண் மருத்துவரின் தந்தை, “போலீசார் ஆரம்பத்திலிருந்தே, இந்த  வழக்கை மூடிமறைக்க முயல்கின்ற னர்” என்று புதிய குற்றச்சாட்டை முன் வைத்தார். “பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்லும் போது எங்களை அவர்கள் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. நாங்கள் காவல் நிலையத்தில்தான் காத்திருந் தோம். பின்னர், உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​ஒரு மூத்த போலீஸ் அதிகாரி எங்களுக்கு பணம் கொடுத்தார், நாங்கள் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “இறுதிச் சடங்கு முடியும் வரை 300 முதல் 400 போலீ சார் எங்களை சுற்றியும் இருந்தனர். அதன்பின்னர், ஒருவர்கூட எங்களு டன் இல்லை. நாங்கள் எப்படி வீட்டுக்கு போவோம் என்று அவர்கள் சிந்திக்கவில்லை. இறுதிச் சடங்கு வரை சுறுசுறுப்பாக செயல்பட்ட காவலர்கள், அதன்பிறகு செயலிழந்து விட்டனர்.

மம்தா காவல்துறையின் மனிதாபிமானம் இதுதானா?

மகளின் சடலத்தை வீட்டின் நடுவே வைத்து பெற்றோர்கள் அழுது  கொண்டிருக்கும் போது, போலீஸ் அதிகாரி ஒருவர் பணம் தருவது குறித்து பேரம் பேசினார். இதுதான் போலீஸின் மனிதாபிமானமா? எங்கள் தரப்பில் எல்லா கடமைகளை யும் செய்துவிட்டோம் எனக் கூறும் காவல்துறையினரின் கடமை இது தானா?” எனவும் கேள்வி எழுப்பியுள் ளார்.

மேற்குவங்க திரிணாமுல் அரசின் நடவடிக்கைகள் மீது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தமது அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பெண் மருத்து வரது தந்தை அளித்த பேட்டியும், மம்தா அரசின் அலட்சியம் மற்றும் பிரச்சனையை மூடிமறைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், எதனை மறைப்பதற்காக பணம் கொடுக்க முயற்சித்தனர்? என்ற  கேள்வியையும் எழுப்பியுள்ளது.