india

img

முகமது ஜுபேர் மீது வழக்கு - இந்திய பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

முகமது ஜுபேர் மீது பி.என்.எஸ் 152 (இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த உத்தரப் பிரதேச காவல்துறைக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் (Press Club of India) கண்டனம் தெரிவித்துள்ளது.
உ.பி சாமியார் நர்சிங்கானந்த், முகமது நபி குறித்து அவதூராக பேசிய காணொளியை பிரபல தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபேர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ‘வெறுப்பு பேச்சு’ என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான புகாரில், முகமது ஜுபேர் மீது BNS சட்டப் பிரிவு 152 (இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஆகிய 2 பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச போலீசார் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் முகமது ஜுபேருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 
இந்த நிலையில், உத்தரப் பிரதேச காவல்துறைக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் (Press Club of India) கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய பத்திரிகையாளர் சங்கம் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபேர் மீது பி.என்.எஸ் 152 (இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த உத்தரப் பிரதேச காவல்துறைக்கு கண்டனம்.
சுதந்திரமான சிந்தனையாளர்கள், ஊடகங்களின் குரலை நசுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இந்த சட்டப்பிரிவில் இருப்பதாக உணரும் அனைவரும் இதனை எதிர்த்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் தேசத்துரோக வழக்குகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதன் புதிய அவதாரமாக பி.என்.எஸ் 152 சட்டப் பிரிவும் பார்க்கப்படுகிறது.
முகமது ஜுபேர் மீது பதிவு செய்யப்பட்ட FIR-ஐ திரும்பப் பெற நாங்கள் வலியுறுத்துகிறோம்.” 
இவ்வாறு பதிவிட்டுள்ளது.