‘இந்தியா' கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், ஏற்கனவே பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி என 4 இடங்களில் நடத்த நிலையில், 5 ஆவது கூட்டம் காணொலி வாயிலாக இன்று (ஜனவரி-13) நடைபெற்றது. இதில், சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், ‘இந்தியா' கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க நிதிஷ்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் முடிவெடுத்தால் மட்டுமே பொறுப்பை ஏற்பதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, ஒருங்கிணைப்பாளர் தொடர்பாகவும் விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.