india

img

நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்த ‘இந்தியா’ கூட்டணி முதல்வர்கள்!

புதுதில்லி
‘நிதி ஆயோக்’கின் 9-ஆவது ஆட்சிக்குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் சனிக்கிழமையன்று (ஜூலை 27) துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

‘விக்சித் பாரத்’ என்ற பெயரில் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது குறித்து, 10 துறை சார்ந்த கருப்பொருள் பார்வைகளை ஒருங்கிணைக்கும் பணி ‘நிதி ஆயோக்’கிடம் கடந்த ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி நடப்பு ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிப்பதற்கான கருப்பொருட்களாக, ​​குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம்; மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை; ஆரோக்கியம்: அணுகல், மலிவு மற்றும் கவனிப்பின் தரம்; பள்ளி: அணுகல் மற்றும் தரம் மற்றும் நிலம்; சொத்து: அணுகல், டிஜிட்டல் மயமாக்கல், பதிவு மற்றும் பிறழ்வு என ஐந்து முக்கிய தலைப்புகளில் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் ஆட்சிக்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை வழங்காமல் பாரபட்சம் காட்டியிருப்பது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசின் இந்த பாரபட்சத்திற்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டும் வகையில், ஜூலை 27 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூட்டப்பட்டுள்ள ‘நிதி ஆயோக்’ கூட்டத்தைப் புறக்கணிப்பதாக, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் மாநில முதல்வர்கள் அறிவித்தனர். ஆளும் பாஜக கட்சி கூட்டணியில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் கடைசி நேரத்தில் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். 

எனினும், ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்று, மோடி அரசின் அநீதி குறித்து கேள்வியெழுப்புவேன் என்று ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டுமே அறிவித்தார்.

இதனிடையே, தில்லி பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில், ‘நிதி ஆயோக்’கின் 9-ஆவது நிா்வாகக் குழுக் கூட்டம், சனிக்கிழமையன்று காலை துவங்கியது. இதில், ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இருக்கும் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்கெனவே அறிவித்தபடி தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். பாஜக கூட்டணியில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பங்கேற்கவில்லை.

‘இந்தியா’ கூட்டணி கட்சிகளிலிருந்து மம்தா பானர்ஜி மட்டுமே கலந்து கொண்டார். ஆனால், அவரையும் கூட்டத்தில் பேசுவதற்கு மோடி அரசு அனுமதிக்கவில்லை என்றும், 5 நிமிடத்தில் அவரது மைக்கை அணைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதில், “நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்போது, மாநில அரசுகளை ஒன்றிய அரசு பாரபட்சமாக நடத்தக் கூடாது என கூறினேன். தொடர்ந்து பேச விரும்பினேன். ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். எனக்கு முன் பேசியவர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” என குற்றம் சாட்டினார்.

மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு மறுத்ததற்கு எனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “இதுதான் கூட்டுறவுக் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படிதான் நடத்துவதா?” என்று கேள்வியெழுப்பி கண்டித்துள்ளார். “எதிர்க் கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை ஒன்றிய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, மம்தா அவமதிக்கப்பட்டதாக கூறுவதை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறுவது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.