தமிழ்நாட்டில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொதுக் கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி உடனடியாக வழங்கிடு மாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதியாக ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.