பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராம்பூரில் நிலம் மீட்பு தொடர்பான விவகாரத்தில் 10-ஆம் வகுப்பு பயிலும் சோமேஷ் குமார் என்ற பட்டியலின மாணவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். சோமேஷ் குமார் உடன் இருந்த மேலும் இருவர் துப்பாக்கிச்சூட்டிற்கு படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மத்தியகுழு உறுப்பினர் விக்ரம் சிங் ஆகியோர் மாநில கட்சி ஊழியர்களுடன் சோமேஷ் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நாங்கள் உங்களோடு இருப்போம் என உறுதி அளித்தனர்.