90 வயதான பத்ம ஸ்ரீ விருது பெற்றவரும், ஒடிசி நடனக் கலைஞருமான குரு மாயாதர் ராவத், டெல்லியின் ஆசிய விளையாட்டு கிராமத்தில் உள்ள அரசு விடுதியிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார்.
டெல்லியில் 90 வயதான குரு மாயாதர் ராவத் என்பவர் ஒடிசி நடனக் கலைஞரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர் ஆவார். இவர் டெல்லி ஆசிய விளையாட்டு கிராமத்திலுள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு அரசு வீட்டு ஒதுக்கீட்டை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இந்த முடிவை எதிர்த்து அவரும், மற்ற கலைஞர்களும் நீதிமன்றத்தை அணுகினர், ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பு இவர்களுக்கு எதிராக வந்தது. மேலும் ஏப்ரல் 25க்குள் காலி செய்யுமாறு கடந்த பிப்.25 ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், அவரது வீட்டில் இருந்த உடமைகள், விருதுகள் உள்ளிடவைகளை வீட்டிற்கு வெளியே எடுத்து வைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவரது மகள் மதுமிதா ராவத் கூறுகையில், வெளியேற்றம் சட்டப்பூர்வமானதுதான். ஆனால் அதை செய்த விதம் மனிதாபிமானமற்ற முறையில் இருக்கிறது.
தற்போது இருக்கிற மோடி அரசாங்கத்தில், கலைஞர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என ஒன்றிய அரசை கடுமையான சாடினார். 2014ல் அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருந்தாலும், 2020ல் தான் கலைஞர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.
மேலும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், ராஜூவ் காந்தி இந்த அரசு வீட்டு ஒதுக்கீட்டை செய்ததை, அதை பாஜக பறிக்க முயல்கிறது. இந்த அரசியல் விளையாட்டிற்கு நாங்கள் தான் பலிகடா என்று கடுமையாக விமர்சித்தார்.
மதுமிதா ராவத் தொடர்ந்து பேசுகையில், இத்தனை வருடங்கள் இந்த நாட்டிற்கு சேவை செய்த அவர், குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் கீழ் சீடர்களுக்கு கற்பித்தார். அவர் தனது சேவையால் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை, மேலும் அவருக்கு சொத்து, நிலம் என ஏதுமில்லை. அவருடைய வங்கிக்கணக்கில் வெறும் ரூ. 3,000 மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.
குரு மாயாதர் ராவத் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, மே 2 ஆம் தேதிக்குள் மற்ற 8 பிரபல கலைஞர்களும் குடியிருப்புகளை காலி செய்யும்படி புதன்கிழமை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.