இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரியான கர்னல் சோஃபியா குரேஷியை தவறாக விமர்சித்த விவகாரத்தில் மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்த இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரியான கர்னல் சோஃபியா குரேஷியை, பாகிஸ்தானின் சகோதரி என்று அவமதித்த மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவுக்கு நாடு முழுவது கடும் கண்டனங்கள் எழுந்தது.
விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்ய ம.பி உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் அவர்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜய் ஷா உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு மீதான விசாரணையில் “அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது” என பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய மறுத்து மாநில உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்ஷா மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் இருந்து விடுபடவே மன்னிப்பு கேட்பது போல் வீடியோ வெளியிட்டதை ஏற்க முடியாது எனவும், வழக்கை அமைச்சர் சந்தித்தே ஆக வேண்டும் எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கவும், மூன்று அதிகாரிகளில் ஒருவர் ஐஜி அல்லது டிஜிபி அந்தஸ்து அதிகாரியாக இருக்க வேண்டும், மூவரும் வெளிமாநில அதிகாரிகளாக இருக்க வேண்டும், ஒரு பெண் அதிகாரி இடம்பெற வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மே 28 ஆம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.