headlines

img

ஒட்டாத புளுகும் - புள்ளி விவரமும்

ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் தேசிய மாநாட்டில் கிராமப்புற பொருளாதாரம் பற்றி பேசும் போது, ‘‘சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 70 ஆண்டு களில் 64 லட்சம் ஹெக்டேர் நிலம் மட்டும்தான் சாகுபடி செய்யக்கூடிய நிலமாக மாற்றப்பட்டது. ஆனால், பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சி யில் மட்டும் 64 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் அதிகரித்து உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.

இது ‘பிரதான் மந்திரி க்ரிஷ் சிஞ்சாயி யோஜனா’ திட்டத்தின் மூலமாக சாதிக்கப் பட்டுள்ளது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டுள்ளார். 

இது ஒரு விவரங்கெட்ட புளுகாக உள்ளது. ஒன்றிய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் பொருளாதாரம் மற்றும் புள்ளி யல் இயக்குநரகம் மூலமாக நிலப் பயன்பாடு குறித்து 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 2018-19 வரையிலான விவரங்கள் அடங்கியுள்ளது.

1950-51 இல், நாட்டில் 1,897 லட்சம் ஹெக்டே ராக இருந்த சாகுபடி நிலப்பரப்பு, 2013-14ல் 1,819 லட்சம் ஹெக்டேராக சுருங்கியது. அதாவது, மத்தி யில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபோது, அமித் ஷா கூறியது போல் இந்தியாவின் சாகுபடி நிலம் 64 லட்சம் ஹெக்டேர் அல்ல, 1,819 லட்சம் ஹெக்டேர்.

சுதந்திரத்துக்கும் 2013-14க்கும் இடைப்பட்ட காலத்தில் விவசாய நிலம் 78 லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. இருப்பினும் சாகுபடி நிலம் குறைந்து கொண்டே போவது நிற்கவில்லை. தொடர்கிறது.  

சமீபத்திய தரவு, 2018-19 முதல், இந்தியாவின் விவசாய நிலத்தின் அளவு 1,809 லட்சம் ஹெக்டே ராக உள்ளது. இதன் பொருள் பாஜக ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாகுபடி நிலம் 10 லட்சம் ஹெக்டேர் சுருங்கி விட்டது.

‘‘நீர்வள ஆதாரம் ஒரு கண்ணோட்டம் 2022’’ என்று அறிக்கையின் படி- 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 64.14 லட்சம் ஹெக்டேர் நீர்ப்பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2007-2012) முடிவில் நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்ப்பாசனத் திறன் ஏற்கனவே 1,135 லட்சம் ஹெக்டேராக இருந்தது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

1950-51 இல் 17.1 சதவீத நிலம், நீர்ப்பாசனம் செய்யப்படும் மொத்த பயிர்ப் பகுதியாக இருந்தது. 2013-14 இல் 47.7 சதவீதமாக அதிகரித் துள்ளது. இது மோடி அரசாங்கத்தின் கீழ் முதல் ஐந்து ஆண்டுகளில் சுமார் 4 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்து, 2018-19ல் 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் 48 சதவீதம் விளைச்சல் நிலம் இன்னும் மழையை நம்பியே உள்ளது. 

ஆனால், அமித்ஷா, வழக்கம் போல அழுகிப் போன புளுகுகளையே கட்டவிழ்த்து விட்டுள்ளார்.