குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் குஜராத்தையே சுற்றி சுற்றி வருகின்றனர்.
குஜராத் மாடல் என்று சொல்லித்தான் பிரதமர் மோடி ஒன்றிய ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். ஆனால் அந்த மாடலை சொல்லி இப்போது கூட பாஜகவினரால் வாக்கு கேட்க முடியவில்லை. கடந்த 27 ஆண்டுகளாக குஜ ராத்தில் பாஜகதான் தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த மாநிலத்தின் வளர்ச்சி அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதை மூடி மறைக்க பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காஷ்மீர், ராமர் கோவில் என்று மக்களினுடைய கவனத்தை திசை திருப்பும் வகையிலேயே பேசி வருகின்றனர். அந்தக் கட்சி கோவில்களை மையப்படுத்தி ‘கவுரவ யாத்திரை’ நடத்தி வருகிறது.
ஒரு யாத்திரையை துவக்கி வைத்து பேசிய அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு தகுதி அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ கொண்டு வந்தது அப்போதைய பிரதமர் நேரு தான். இப்போதைய பிரதமர் அதை ஒரே அடி யாக வீழ்த்தி காஷ்மீரை இந்தியாவின் பிற பகு தியோடு இணைத்து விட்டார் என்று பேசியி ருக்கிறார்.
நாடு விடுதலை பெற்ற பிறகு ஜம்மு- காஷ்மீர் மாநில மக்கள் இந்தியாவுடன் இணைய முன் வந்தபோது அவர்களுடைய பண்பாட்டுத் தனித் தன்மையை பாதுகாப்பதற்காகவே அரசியல் சட் டத்தில் 370ஆவது பிரிவு கொண்டு வரப்பட்டது. அது முற்றிலும் நியாயமான ஒரு நடவடிக்கை.
ஆனால் தொடர்ந்து வந்த ஒன்றிய அரசு கள் அந்த சட்டப் பிரிவை நீர்த்துப் போகச் செய்தன. அன்றைய ஜனசங்கம் துவங்கி இன்றைய பாஜக வரை அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூக்குரலிட்டு வந்தது. அதைத் தான் மோடி அரசு செய்திருக்கிறது. அதுமட்டு மின்றி, அந்த மாநிலத்தையே உடைத்து நொறுக் கியுள்ளது. ஆனால் அவர்களால் அமைதியை கொண்டு வர முடியவில்லை. குறுகிய மத அடிப் படையும், சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீதான வன்மமுமே இதற்கு காரணம்.
குஜராத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவுக்கு வன்முறை தாண்டவம் ஆடியவர்கள் இப்போது மத பகைமையை தூண்டி விட்டு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற துடிக்கின்றனர்.
இதே அடிப்படையில்தான் உ.பி.,யில் ராமர் கோவில் கட்டிக் கொண்டிருப்பதையும் அமித்ஷா பெருமையாக குறிப்பிடுகிறார். இதற்கு இவர்கள் கையாண்ட வழிமுறை அராஜகமானது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை எழுதிக் கொடுத்து கொண்டிருப்பவர்கள் அதை மறைக்க மக்களின் மத உணர்வை மத வெறியாக்குகின்றனர். இந்த ஆபத்தான விளையாட்டிற்கு குஜராத் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.