headlines

img

நூற்றுக்கு நூறு - முழுவதும் பழுது

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மனதின் குரல் என்ற தலைப்பில் பேசி வந்ததன் நூறாவது நிகழ்ச்சி ஞாயிறன்று நிறைவு பெற்றுள் ளது. இதுவரை உலகத்திலேயே நடந்திராத ஒரு அதிசயம் போல தடபுடல் ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

உலகம் முழுவதும் 63 மொழிகளில் பிரதமரின் நூறாவது நிகழ்வின் உரை ஒலிபரப்பப்பட்டது என்றும், இதற்காக ஐ.நா.வில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தி யாவிலேயே பிரதமரின் உரையை கேட்டவர்கள் மிகக் குறைவு. ஆனால் ஆங்கிலம் உட்பட 11 அந்நிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் நேரடியாக ஒலிபரப்பு செய்யப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எதைச் செய்தா லும் அதில் தேவையற்ற விளம்பரம், ஆடம்பரம் என்பது பிரதமர்  மோடிக்கு வாடிக்கையான ஒன்றுதான்.

2014ஆம் ஆண்டு விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சியை துவக்கியதாக பிரதமர் குறிப்பிட்டுள் ளார். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம் என்றெல் லாம் பிரதமர் முழங்கியுள்ளார். ஆனால் இவரது ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எத்தகைய பாதுகாப்பு உள்ளது என்பதை நாடறியும். பெண் குழந்தைகள் உட்பட பெரும்பாலான குழந்தைக ளின் கல்வியை பறிப்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.

நான் குஜராத்தில் முதல்வராக இருந்த போது, சாமானிய மக்களை சந்தித்து பழகுவது இயல்பான விசயமாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குஜராத்தில் இவரது ஆட்சி யில் சிறுபான்மை மக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பான வழக்கு களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க விடாமல் செய்தார்கள். குஜராத் வன்முறை கொடுமைகளை பிபிசி ஆவணப் படம் வெளிச் சம் போட்டுக் காட்டியது. அந்த நிறுவனத்தின் மீது வருமான வரித்துறையை ஏவிவிட்டது ஒன்றிய அரசு. இவர்களால் முன்வைக்கப்பட்ட குஜராத் மாடல் என்பது முற்றிலும் பொய்க ளால் புனையப்பட்டது என்பதை இவருடைய ஒன்றிய ஆட்சிக் காலம் நிரூபித்துவிட்டது. ஆனாலும் கூட பிரதமர் தன்னுடைய குஜராத் ஆட்சிக் கதைகளை நிறுத்திக் கொள்ள தயாராக இல்லை.

என்னைப் பொறுத்தவரை மனதின் குரல் என்பது ஒரு வழிபாடு, விரதம். இறைவனை வேண்டிச் செல்பவர்கள் பிரசாதத்துடன் திரும்பி வருகிறார்கள். அதுபோல இறைவனின் வடிவ மான மக்களின் பாதங்களில் கிடைத்த பிரசாதம் போன்றது மனதின் குரல் என்று உருக்கமாக பேசியுள்ளார் பிரதமர். இது ஒருவகையில் பொருத்தமானதுதான். கோவில்களில் கடவுள் சிலைகளுக்கு வைக்கப்படும் பிரசாதத்தை கடவுள் எடுத்துக் கொள்வதில்லை. அதுபோல மக்களுக்காக பேசப்பட்டது என்று கூறப்படும் மனதின் குரலால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இது என்னுடைய மனதின் ஆன்மீக பயணமாகி விட்டது என்று முடித்துள்ளார் பிரத மர். இந்த பயணத்தால் மக்களுக்கு எந்த அமைதி யும் கிடைக்கவில்லை என்பது மட்டும் உறுதி.