தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்களன்று தமிழக சட்டப் பேரவையில் நடந்து கொண்ட விதம் அநாகரீகத்தின் உச்சம் என்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது ஆகும். ஒன்றிய அரசு அவரை உடனடியாக ஆளுநர் பொறுப்பிலிருந்து திரும்பப் பெற வேண்டும். சட்டப் பேரவையிலிருந்து மரபுகளுக்கு மாறாக வெளி யேறி தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்திய ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆளுநர் உரை என்று கூறப்பட்டாலும் அந்தந்த மாநில அரசுகளின் கொள்கைக் குறிப்பு களையே ஆளுநர் வாசிப்பது வழக்கம். ஆனால் திங்களன்று சட்டப் பேரவை கூடிய போது ஆளுநர், மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரை யின் சில பகுதிகளை வாசிக்க மறுத்து, தன்னுடைய கைச் சரக்கை கலந்து விட்டுள்ளார். பக்குவமற்ற முறையில் நடந்து கொண்ட ஆர்.என்.ரவி ஆளுநர் பொறுப்பை வகிக்கத் தகுதியற்றவர்ஆகிவிட்டார்.
ஆர்.என்.ரவி ஆளுநராக பதவியேற்றதிலி ருந்தே மாநில அரசோடு தேவையில்லாமல் மோதல் போக்கை வளர்த்து வருகிறார். ஆளுநர் மாளிகையையே ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாற்றிய அவர், ஒரு போட்டி அரசை நடத்த முயன்றார்.
கூட்டாட்சித் தத்துவத்தில் காலூன்றிக் கொண்டே மாநில சுயாட்சித் தத்துவத்தை உயர்த்திப் பிடித்து வந்துள்ள தமிழ்நாடு ஆளுந ரின் செயலை அவ்வப்போது கண்டித்து வந்துள்ளது. அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டிய ஆளுநர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர ஊழியராகவே மாறிவிட்டார்.
சனாதன சாக்கடையை சந்தனம் என்று வர் ணிப்பது, வள்ளுவத்தில் இருந்த ஆன்மீக கருத்துக் களை ஜி.யு.போப் நீர்த்துப் போகச் செய்துவிட்டார் என்று வம்படி வழக்கு நடத்துவது, இதன் தொடர் ச்சியாக தமிழ்நாடு என்ற பெயரையே ஏற்க மறுத்து தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சட்டாம்பிள்ளையாக மாறி சண்டித்தனம் செய்து வந்தார். அதுமட்டுமின்றி ஆன்லைன் சூதாட்டத் திற்கு தடை விதிப்பது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரு வது போன்ற பேரவையில் நிறைவேற்றிய சட்டமுன் வரைவுகளுக்கு ஒப்புதல் கொடுக்க மறுத்து தமிழ் நாட்டின் உணர்வுகளுக்கு எதிராக விஷம் கக்கினார்.
இதனுடைய நீட்சியாக ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை உச்சரிக்க மறுத்தும், மாநில சுயாட்சி, சமூக நீதி போன்ற வார்த்தைகளை தவிர்த்தும் ஆளுநர் பொறுப்புக்குரிய மாண்பைக் குலைத்திருக்கிறார். ஆளுநர் ரவி சொந்தமாக பேசிய பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் உடனடியாக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது பாராட்டத்தக்கது. இந்த நிலையில்தான் ஆர்.என்.ரவி அவையில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளி நடப்பு செய்திருக்கிறார். ஆளுநரின் செயலைக் கண்டித்து ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் மாளி கையை முற்றுகையிட அறைகூவல் விடுத்துள் ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆளுநரின் மாளிகையை நோக்கி தமிழகம் திரளட்டும்.