headlines

img

வியாக்கியானம்!

தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி  ‘தமிழகம்’ எனக் குறிப்பிட்டது  ஏன்? என்பதற்கு இருவாரங் கள் கழித்து  தற்போது விளக்கமளித்திருக்கிறார். அதில் பொய்க்கு மேல் பொய்யும்,  புரட்டுமே இருக் கிறது. விளக்கம் என்ற பெயரில் குழப்பத்தை ஏற் படுத்தும் குதர்க்கமும் இருக்கிறது.  இது ஏற்புடைய தல்ல.

ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுவது போல் அவரது வியாக்கியானமும் இருக்கிறது. ஆளுநர் காசி மற்றும் தமிழ்நாட்டுக் கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க மட்டுமே தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன் என்கிறார். அந்த கூற்று உண்மை என்றால்;  சட்ட மன்றத்தில் தமிழ்நாடு அரசு அச்சிட்டுக் கொடுத்த ஆளுநர் உரையில் “தமிழ்நாடு” என்கிற பெயரை ஏன் வாசிக்காமல் தவிர்த்தார்.  இது யாருடைய தொடர்பைக் குறிப்பதற்கான குறியீடு?

கடும் எதிர்ப்பு வந்த பின்னரும்,  பொங்கல் விழா அழைப்பிதழில்,  தமிழ்நாடு என்பதைத் தவிர்த்து  தமிழகம் என ஏன் அச்சிடப்பட்டது?  தமிழக அரசின் இலச்சினையைத் தவிர்த்து  ஏன் ஒன்றிய அரசின் இலச்சினை மட்டும் அச்சிடப்பட்டது?    இதற்கு ஆளுநர்  என்ன  கம்பி கட்டுகிற கதையைச் சொல்லப்போகிறார்?

அடுத்த அபத்தமாக, “அந்த காலத்தில் தமிழ் நாடு என்பது இருக்கவில்லை”  என்று தமிழ் நாட்டின்  மீது  தனக்கிருக்கும் வன்மத்தைக் கக்கியி ருக்கிறார். அந்த காலம் என்றால் எந்த காலம்? ஆளுநரின் பாட்டன், பூட்டன், பரம்பரையினர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடு எனப் பெயர் இருந்து வருகிறது. சிலப்பதிகாரத்திலே “இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கரு தினை யாயின்  ஏற்பவர் முதுநீர் உலகு முழுமை யும் இல்லை’’ எனக் கூறப்பட்டுள்ளது.

“மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங் கொண்டார்” என நாவுக்கரச நாயனார் புராணம் குறிப்பிடுகிறது. செப்பும் வினாவும் வழுவாது வரு தற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு” என்று எடுத்துக்காட்டுகின்றார் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட இளம்பூரணர்.  சங்க இலக்கியங்களி லும் சங்க காலத்திற்குப் பிந்தைய இலக்கியங்களி லும்  தமிழ்நாடு என்ற பெயர் காலம் காலமாக பயன் படுத்தப்பட்டே வந்துள்ளது. இதில் எந்த காலத்தை அறிந்தவர் ஆர்.என்.ரவி? வரலாறு என்பது  ஆன் லைன் ரம்மி விளையாட்டல்ல என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்.

‘தமிழகம்’ என்பதை “ தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல” பொருள் கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அத் தகைய அதிகாரம் எதுவும் நியமனப் பொறுப்பில் உள்ள தமக்கில்லை என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய அதிகார வரம்பை மீறி வாய்நீளம் காட்டினால் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். 

தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்க ளையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை ஆர்.என்.ரவி கைவிடுவதே நல்லது. அல்லது இந்த பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் ஊழியராக அறிவித்துக் கொள்ளட்டும்.