headlines

img

அதிமுக ஆதரித்தாலும் தமிழகம் நிராகரிக்கும்...

விவசாயத்தின் வேரில் வெந்நீரை ஊற்றும் வேளாண்மை மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அதிமுகஆதரவு அளித்ததோடு, அந்த மசோதாக்களை நியாயப்படுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீண்ட நெடிய நீட்டோலை வாசித்திருக்கிறார். 

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சியின் அமைச்சர் ஹர் சிம்ரத்  கவுர் பாதல் இந்த சட்டங்களை எதிர்த்து ராஜினாமா செய்துள்ள நிலையில், மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை கிட்டத்தட்ட மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்று மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய இந்தச் சட்டங்களை அதிமுக ஆதரிப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும். ‘நானும் ஒரு விவசாயி’ என்று மீண்டும் மீண்டும் மாறுதட்டிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடிபழனிசாமி, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்குத் தான் இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்; தமிழகத்தை பாதிக்காது என்று அசட்டுத்தைரியத்தில் அறிக்கை விடுகிறார். நீட் தேர்விலிருந்து, புதிய கல்விக்கொள்கை வரை மத்திய அரசு கொண்டுவந்த அனைத்தும் தமிழகத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இந்நிலையில் இந்த வேளாண் மசோதாக்கள் தமிழகத்தைப் பாதிக்காது என்று எப்படி முதல்வர் கூறுகிறார்? தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற சுயநல நோக்கம் அன்றி விவசாயிகளின் நலன்குறித்து இவர்களுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை.விளைபொருளுக்கு அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைவிட தனியார் நிர்ணயிக்கும் விலை குறையக்கூடாது என்பதற்குஎந்த உத்தரவாதமும் இல்லை.

மேலும் விளைபொருளுக்கு விவசாயிகள் பேரம் பேசும் உரிமையையும் இம்மசோதா பறிக்கிறது. இலட்சக்கணக்கான சிறு-குறு விவசாயி களை அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்றி கார்ப்பரேட் சூதாடிகளிடம் விவசாயத்தை ஒப்படைக்கும் வகையிலேயே இம்மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று தங்களது விளைபொருளை விற்றுக்கொள்ளலாம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வார்த்தைகளேயன்றி வேறல்ல.கடந்த தேர்தல் அறிக்கையிலேயே பாஜக விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என்று வாய்ப்பந்தல் போட்டது. அதே வார்த்தைகளை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பாஜக கூறியது. ஆனால்விவசாயிகளின் தற்கொலை பல மடங்குஉயர்ந்ததேயன்றி விவசாயிகளின்  வருமானம் உயரவில்லை என்பது மட்டுமல்ல,கடுமையாக சரிந்தது. விவசாயம் ஏற்கெனவே கட்டுபடியாகாத தொழிலாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் பாஜகவின் இந்த புதிய சட்டங்கள் விவசாயத்துறையையும் கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றிவிடுகிற கயமையே தவிர வேறல்ல.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடும் நிலையில் தமிழகத்திலும் போராட்டக்களத்திற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆளும் அதிமுக இம்மசோதாவை ஆதரித்தாலும் தமிழக மக்கள்தங்கள் போராட்டத்தின் மூலமாக இந்த தீய சட்டங்களை நிராகரிப்பார்கள் என்பது உறுதி.