சிரியாவின் சமகால நெருக்கடி ஏகாதிபத்திய சக்திகளின்; மதவாத அரசியல் வெறித்தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடாகும். 24 ஆண்டுகால அசாத் ஆட்சியின் வீழ்ச்சி என்பது வெறும் எதேச்சதிகார எதிர்ப்பு மட்டுமல்ல, மாறாக ஒரு சிக்கலான - ஏகாதிபத்திய - மதவாத-அரசியல் பின்னணியைக் கொண்டது.
மக்கள்தொகையில் 15 சதவீதமே உள்ள அலவைட் சிறுபான்மையினரின் ஆட்சி, சன்னி பெரும்பான்மை மக்களிடையே ஆழமான அதிருப்தியை உருவாக்கியது. இந்த இடை வெளியை ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நல னுக்காக சூழ்ச்சிகரமாக பயன்படுத்திக் கொண்டன. அமெரிக்காவும் மேற்கத்திய நாடு களும் “ஜனநாயகம்” என்ற போர்வையில் மதவாத தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களும் நிதியும் வழங்கி, உள்நாட்டு மோதலை தீவிரப்படுத்தின.
ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (HTS) போன்ற குழுக்கள் “ஜிஹாத்” என்ற முழக்கத்துடன் இளை ஞர்களை ஈர்த்து, மதவாத அடிப்படையிலான ஆட்சியை நிறுவ முயல்கின்றன. இதே வேளை யில், குர்திஷ் மக்களின் எஸ்டிஎப் அமைப்புக்கு எதிராக துருக்கி மேற்கொள்ளும் நடவடிக்கை கள் இன-மத முரண்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன.
இந்த மதவாத அரசியல் மோதல்கள் சிரியா வின் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழித்துள் ளன. கடந்த 13 ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 68 பில்லியன் டாலரில் இருந்து 9 பில்லியன் டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் இந்த வீழ்ச்சியை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.
மத அடிப்படையிலான பிளவுகள் சிரியாவின் தேசிய ஒருமைப்பாட்டை முற்றாகச் சிதைக்க துவங்கிவிட்டன. 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் எதிர்ப்பு என்ற பெயரில் முஜாஹி தீன்களுக்கு ஆதரவு அளித்து, பின்னர் அந்நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய அமெரிக்க உத்தி, இன்று சிரியாவிலும் திரும்ப நடைமுறைப் படுத்தப்படுகிறது. லிபியாவிலும் இராக்கிலும் மத வாத குழுக்களை ஆயுதபாணியாக்கி நாட்டை சீரழித்த அதே பாணி.
தீர்வு என்பது மதச்சார்பற்ற, ஜனநாயக சிரியாவை மீட்டெடுப்பதில்தான் உள்ளது. வெளி நாட்டு தலையீடுகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். பொருளாதாரத் தடைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அனைத்து மதப்பிரிவு மக்களும் சமஉரிமையுடன் வாழும் ஒரு புதிய சிரியாவை உருவாக்க, உலக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
சிரியாவின் போராட்டம் வெறும் உள்நாட்டு மோதல் அல்ல. இது ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டை அரசியலுக்கும், மக்களின் விடுதலைக் கும் இடையிலான மோதல். இந்த போராட்டத் தில் சிரிய மக்களின் வெற்றி என்பது உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் வெற்றியாகும்.