headlines

img

வங்கித் துறை  இனி அம்போதானா?

பாஜக தலைமையிலான மத்திய நரேந்திரமோடி அரசு இனி வங்கிகளையும் கார்ப்பரேட் கைகளில் ஒப்படைத்து விட்டு,  மக்களை நடுத்தெருவில் நிறுத்த முடிவு செய்திருக்கிறது. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்ற பழமொழிக்கேற்ப அதற்கான அறிவிப்பு தற்போது வெளி வந்திருக்கிறது.

இதுவரை  பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்கஅனுமதி இல்லை. ஆனால் அவர்கள் வங்கிகளில் 10 சதவீதம் பங்குகளை வைத்திருக்க லாம். பங்குகள் வைத்திருப்பினும் வங்கிக் குழுவில்இடம்பெற அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.ஆனால் தற்போது பி.கே.மொஹந்தி தலைமையிலான ரிசர்வ் வங்கி குழு அளித்துள்ள பரிந்துரையில் அதையெல்லாம் நீக்கி,  கார்ப்பரேட்கள் தாங்களே வங்கியை துவங்கி கொள்ளும் வகையில்  பரிந்துரைத்திருக்கிறது.
கண்முன்னே தனியார் வங்கிகளின் மோசடிகள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன. இந்த நிலையிலும் கொஞ்சமும் நாட்டு மக்களைப் பற்றிகவலை கொள்ளாமல் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க கார்ப்பரேட்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்திருக்கிறது. உதாரணமாக ஒரு வங்கி பொதுமக்களிடமிருந்து திரட்டி வைத்திருக்கும் வைப்புத்தொகைக்கு மேல் கடன் வழங்கக் கூடாது. ஆனால் எஸ்பேங்கின் மொத்த வைப்புதொகையே ஒரு லட்சம் கோடிதான். ஆனால் அது 1லட்சத்து 72 ஆயிரம் கோடி கடன் வழங்கி மோசடி செய்திருக்கிறது. அதே போல் ஐசிஐசிவங்கி மோசடி, வங்கி அல்லாத நிதி நிறுவனமான திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் அடுத்த திவாலாகும் நிலையைஎட்டியிருக்கிறது. இதுதான் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படும் லட்சணம்.

பெருநிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதித்திருப்பது சர்வாதிகார கூட்டுக் களவாணித்தனத்தில்தான் முடியும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள்கவர்னர் ராகுராம்ராஜன், முன்னாள் துணைநிலை ஆளுநர் விரல்ஆச்சாரியா ஆகியோர் கண்டித்திருக்கின்றனர். சிறிய தொகையை கடன்வாங்கிய விவசாயிகளை துன்புறுத்தும் இதேமோடி அரசு பெரிய முதலைகளை கண்டுகொள்வதில்லை. கார்ப்பரேட் கொள்ளையர்கள் வாங்கிய ரூ. 1 லட்சம் கோடி கடனை  மத்திய அரசு கூச்சமே இன்றி தள்ளுபடிசெய்திருக்கிறது. 

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து, ஆர்எஸ்எஸ்- க்கு மிகவும் நெருக்கமான கார்ப்பரேட்களிடம் இந்தியாவை விற்கும் வேலையை படிப்படியாக அரங்கேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கச்சா எண்ணெய் வயல்கள்,துறைமுகம், ஏர்போர்ட், தொலைத்தொடர்பு, ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை அதானி, அம்பானிகளிடம் தாரை வார்த்து.அதனை நடத்த இதுவரை அரசு வங்கிகளில்மக்கள் பணத்தை எடுத்து கொடுத்தது. தற்போதுஅதுவும் போதாது என்று வங்கி துறையையே கொடுக்க முடிவெடுத்திருக்கின்றனர். சில காலங்களில் வங்கி திவால் என  அறிவிக்கும். பின்னர் வங்கியை மீட்பதாக கூறி மீண்டும் பட்ஜெட்டில் இருந்து மக்கள் பணத்தை எடுத்து கார்ப்பரேட்களின் கையில் சேர்க்கும். இதுதான் சர்வாதிகார கூட்டுக் களவாணித்தனம். இதனை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.  
 

;