இந்திய அரசியல் சட்டத்தின்படி வெறுப்புப் பேச்சு என்பது அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல, இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 153ஏ பிரிவின்படி அது ஒரு குற்றச்செயலாகும். அப்படிப் பேசிவருபவர்தான் பாஜகவைச் சேர்ந்த விக்டோரியா கெளரி. அவர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பொறுப் பேற்றிருக்கிறார். இது இந்திய அரசியலமைப் பிற்கு எதிரானது மட்டுமல்ல, தவறான முன்னுதார ணமுமாகும்.
கௌரி நீதிபதியாக நியமனம் ஆவதற்கு எதி ரான வழக்கில், நீதிமன்றம் “அனைத்து விவரங்க ளையும் ஆய்வுசெய்த பின்னரே கொலீஜியம் நீதி பதியாக ஒருவரைப் பரிந்துரைக்கும். நீதிபதிகளை அவர்களின் சமூக வலைதளப் பதிவு அடிப்படை யில் பின்தொடர முடியாது. அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன் மாதிரி உள்ளது” என்று கூறியிருக்கிறது.
அனைத்து விபரங்களையும் ஆய்வு செய்த பின்னரே கொலீஜியம் ஒருவரை நீதிபதியாகப் பரிந்துரைக்கும் என்றால்; உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, கௌரியின் ட்வீட்களில் அவரது கருத்துக்கள் அரசமைப்பு சட்டத்திற்கு உகந்ததாக இல்லை. இது போன்ற கருத்துக்கள் எனது கவ னத்திற்கு வரவில்லை என்று எப்படிக் கூறுகிறார்? ஒருவரின் சமூக வலைத்தள பதிவு அடிப்படை யில் பின்தொடர முடியாது என்றால், இதற்கு முன்பு ஜான் சத்தியன் பெயரை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை செய்தபோது எதன் அடிப்படையில் அந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது?
நீட்தேர்விற்கு எதிரான கருத்தை ஜான் சத்தியன் சமூகவலைத்தளத்தில் மறுபகிர்வு செய்திருந்தார் என்ற காரணம்தானே சொல்லப் பட்டது. அப்போது மட்டும் எப்படி மத்திய உளவுத் துறை ரிப்போட்டில் சமூகவலைத்தள கருத்து எடுத்துக்கொள்ளப்பட்டது? ஜான் சத்தியனாவது மறுபகிர்வுதான் செய்தார். ஆனால் கௌரி என்ன செய்துள்ளார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் யுடியூப் பக்கத்தில், இஸ்லாத்தைப் பச்சைப் பயங்கரவாதம் என்றும், கிறிஸ்தவத்தை வெள்ளைப் பயங்கரவாதம் என்றும் வெளிப்படையாக மதரீதி யான வெறுப்பைக் கக்கியிருக்கிறார். இதனை இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்கிறதா?
அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதி யாகப் பதவியேற்ற முன்மாதிரி உள்ளது என்று நீதிபதிகள் கூறுகின்றனர். அரசியல் பின்புலம் இங்குப் பிரச்சனையல்ல. கொலீஜியம் நீதிபதியா கப் பரிந்துரைத்த பின்னரும் கௌரி எப்படி பாஜக வின் பிரதிநிதியாகச் செயல்பட முடியும் என்பது தான்? 2022 பிப்ரவரி 16இல் கௌரி பெயரை கொலீஜி யம் பரிந்துரைக்கிறது. 2022 டிசம்பர் 2 அன்று பாஜக வின் பிரதிநிதியாக பாஜகவினரோடு இணைந்து சட்ட அமைச்சரைச் சந்திக்கிறார். இருப்பினும் இவர் பாஜக சார்பற்றுதான் செயல்படுவார் என்று நீதிமன்றம் நம்புவதுதான் விசித்திரமாக இருக்கிறது.
“விக்டோரியா கௌரி நீதிபதி பதவிக்குப் பொருத்தமானவரா என்ற கேள்விக்குள் நாங்கள் போகமுடியாது” என்கிறது நீதிமன்றம். இது அனைத்து வழக்குகளுக்கும் பொருந்துமா? விக்டோரியா கௌரியின் நியமனம் இந்திய நீதித்துறை வரலாற்றில் தவறான முன்னுதாரணம் மட்டு மல்ல, ஆபத்தான ஆரம்பமும் ஆகும்.