headlines

img

பாஜகவின் மலிவுப் பதிப்பாக மாறும் அதிமுக

மேற்குவங்க சட்டப் பேரவையை ஆளுநர் முடக்கி வைத்துள்ளதுபோல தமிழக சட்டப் பேரவையையும் ஆளுநர் முடக்கி வைக்கும் நிலை ஏற்படும் என்று முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது. 

பாஜகவின் தயவுடன் பதவியில் தொற்றிக் கொண்டிருந்த இவரை சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தோற்கடித்தனர். ஆசை வெட்கமறியாது என்பது போல தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருவது ஜனநாயக அவமதிப்பு ஆகும். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி கூறி வருவது கூட்டாட்சி ஜனநாயகத்திற்கே குழி பறிக்கும் முயற்சியாகும். தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வழியில்லை என்பதால் மோடியின் திட்டப்படி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என அதிமுக கனவு காண்கிறது.

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தின் உரிமை களை பறித்தபோதெல்லாம் வாய்மூடி மவுனியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. பேரிடர் நிவாரண நிதியை வழங்காதபோதும், ஜிஎஸ்டி நிலுவையை நிறுத்தி வைத்தபோதும், இந்தித் திணிப்பு, நீட் திணிப்பு, புதியக் கல்விக்கொள்கை என தமிழ கத்திற்கு விரோதமான திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்த போதும் எதிர்க்கத் துணியாத அதிமுக மோடி ஆட்சியின் முடிவுகளுக்கு முட்டுக் கொடுத் தது. இதன்மூலம் தமிழகத்தின் நலன்களை காவு கொடுத்தது. 

இப்போது தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப் படும்போது தட்டிக் கேட்கும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. நீட் தேர்வு  தொடர்பான தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியவுடன் மீண்டும் பேர வையைக் கூட்டி மசோதாவை நிறைவேற்றி ஆளு நருக்கு அனுப்பி வைத்தது, குடியரசு தினவிழா வில் ஒன்றிய அரசினால் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தியை மாநிலம் முழுவதும் பவனி வரச் செய்தது போன்றவை இதற்கு உதாரணங்க ளாகும்.

இந்த நடவடிக்கைகளை நியாயமாக அதிமுக ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் தமிழக நலன் பாதிக்கப்பட்டாலும் கவலையில்லை; எப்படியா வது பாஜகவை பணிந்து வணங்கி மீண்டும் ஆட்சிக்கு வர வழியிருக்கிறதா என்றே எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் யோசிக்கிறார்கள். அதனால்தான் 27 அமாவாசை கழித்து அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்து விடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை கலைக்க வேண்டுமென தூபம் போடுகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடைய கடந்த கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குக் கேட்க வக்கில்லாத அதிமுக தலைவர்கள், திமுக அரசு கலைக்கப்படும், சட்டமன்றம் முடக் கப்படும் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டுகின்றனர். அவ்வப்போது ஆளுநரைச் சந்தித்து மாநில ஆட்சியில் தலையிடுமாறு சரணடைகின்ற னர். அன்றைக்கு ஆட்சிக்காக அடிபணிந்தவர்கள்  அதுவே பழக்கமாகி பாஜகவின் மலிவுப் பதிப்பாக மாறிக்  கொண்டிருக்கிறார்கள். இதை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.