மதுரை மாவட்டத்தில் மொழி பிரச்சனை காரணமாக இரண்டு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக்கொள்ள இருந்த விபத்து நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது. இது விபத்து குறித்த ஒரு செய்தி மட்டுமல்ல. தமிழகத்தில் மத்திய அரசின் பணிகளில் தமிழக இளைஞர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருவதன் ஒரு வெளிப்பாடும் ஆகும். மறுபுறத்தில் விவசாயம் பொய்த்துப் போனதாலும், வேலைவாய்ப்பின்மையாலும் கடந்த ஆறாண்டுகளில் தமிழகத்திலிருந்து 2.30லட்சம் பேர் வேலைதேடி வெளிநாடு சென்றுள்ளனர் என்ற செய்தியையும் இத்துடன் இணைத்துப் பார்க்கும்போதுதான் தமிழகத்தில் வளர்ந்து வரும் வேலையின்மையின் விபரீதத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.படித்து முடித்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் ஒருவகை என்றால், தங்களுடைய உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்வோரின் நிலை மிகவும் கொடுமையானது. தங்களது உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல் கொத்தடிமை போன்ற நிலையில்தான் இவர்கள் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் குடும்பங்களைப் பிரிந்து வெளிநாட்டு வேலைக்கு செல்கின்றனர். 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 10ம் வகுப்பைத் தாண்டாத 2லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
ஏஜெண்டுகளால் ஏமாற்றப்படுவது, கடுமை யாக கசக்கிப் பிழியப்படுவது என இவர்கள் சந்திக்கும் நடைமுறை இன்னல்கள் ஏராளம்.இந்தப் பின்னணியில்தான் வெளிநாட்டில் வேலைபார்க்கும் தமிழர்களுடைய நலன்காக்க தனித்துறை ஒன்றை உருவாக்குமாறு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. கேரளமாநில அரசு வெளிநாட்டில் வேலைபார்ப்பவர் களை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது போல தமிழக அரசும் செய்ய வேண்டியது அவசியமாகும்.மறுபுறத்தில் தமிழகத்தில் வளர்ந்து வரும் வேலையின்மைக்கு மிகப்பெரும் காரணமாக இருப்பது விவசாயத்துறை கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்து வருவது ஆகும். பருவமழை பொய்த்து போனதாலும், நீர்நிலைகள் பாதுகாக்கப்படாததாலும், மத்திய மாநில அரசுகள் விவசாயத்தை அழிக்க துடிப்பதாலும் விவசாயத்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளி நாட்டிற்கு செல்வோர் மட்டுமின்றி, சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளைப் போல இடம்பெயர்ந்து செல்வோர் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.வேலையின்மை என்பது புகைந்து கொண்டிருக்கும் ஒரு வெடிகுண்டு போல மிரட்டிக் கொண்டிருக்கிறது. விவசாயத்தைப் பாது காப்பது அரசு காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவது, நெசவு, சிறு-குறு மற்றும் குடிசைத் தொழில்கள் பாரம்பரியத் தொழில்களை பாதுகாப்பதன் மூலமே புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.