headlines

img

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப உறுதியேற்போம்!

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்-நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்று சொல்லிச் சென்ற திருவள்ளுவர் தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வள்ளுவர் கூறிய நெறி களை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்றும்  அவர் கேட்டுக் கொண்டார். ஆனால் வரை பொறுத்த வரையில் ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை என்பதையே கொள்கையாக கொண்டவர்.

இந்தியாவில் பெரும் செல்வத்தை பகுத்து  தரும் வகையில் அவர் ஆட்சியில் கொள்கை கள் வகுக்கப்படவில்லை. உலக பொருளாதார அமைப்பில் ஆண்டுக் கூட்டத்தில் ஆக்ஸ்பார்ம் சர்வதேச நிறுவனம் இந்திய பொருளாதார சமத் துவமின்மை குறித்த அறிக்கையொன்றை வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி இமாலய மலை அளவிற்கு அதிகரித்து வருவதை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்தியாவின் மொத்த செல்வ வளத்தில் நாற்பது சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்கா ரர்களிடம் மட்டுமே குவிந்துள்ளதாக அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் இந்தியாவில் பாதி அளவிலான மக்கள் தொகையினர் நாட்டின் செல்வத்தில் வெறும் 3 சதவீத சொத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

இந்தியாவின் பத்து பணக்காரர்களுக்கு 5 சதவீத வரி விதித்தால் கூட அந்த நிதியை கொண்டு இந்தியாவில் பெரும் பகுதி குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியும் என்றும் கௌதம் அதானி என்ற ஒரே ஒரு கார்ப்பரேட் முதலாளியின் லாபம் மீது வரி விதித்தால் கூட 1.29 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் என்றும் இதன் மூலம் 50 லட்சம் ஆசிரியர்களை பணியமர்த்தமுடியும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த இடைவெளியை அதிகமாக்குவதற்கு தான் பிரதமர் மோடியின் அரசு இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறது. உறங்குவதற்கு கூட எனக்கு நேரமில்லை என்று இந்த நாட்டின் பிரதமர் அழுத்துக் கொள்வதற்கெல்லாம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை எவ்வாறு மேலும் கொழுக்க வைப்பது என்று சிந்திப்பதற்காகவே.

இந்தியாவின் வறுமைக்கோட்டிற்கு கீழே நசுக்கப்படும் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மறு புறத்தில் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் பணக் காரர்களின் எண்ணிக்கை 102 ஆக இருந்த நிலை யில் கடந்தாண்டு இது 166 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நூறு பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 54.12 லட்சம் கோடியாக உயர்ந்துள் ளது. இது இந்தியாவில் பதினெட்டு மாதங் களுக்கான முழு பட்ஜெட்டுக்கு சமமானது என்றும் ஆக்ஸ்பார்ம் கூறுகிறது. 

நவீன தாராளமய கொள்கையின் நாசகர விளைவு தான் இது. இதை எதிர்த்து போராடி முறியடிக்காமல் நம் நாட்டின் பொருளாதாரத்தை சமப்படுத்த முடியாது. உழவர் திருநாளாகவும், உழைப்பவர் உழைப்பைப் போற்றுகிற பெரு நாளாகவும் விளங்கும் பொங்கல் திருநாளின் போது இந்த போராட்டத்திற்கு தயாராவோம்.