headlines

img

கர்நாடக ஆளுநரின் சதி?

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்து அம்மாநில ஆளுநர் தவார்சந்த்  கெலாட்  ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடக தலைமைச் செயலாளருக்கு ஆளுநரின் செயலகம் மூலம் அனுப்பப்பட்டுள்ள செய்தியில், 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17ஏ மற்றும் 2023 பாரதிய நகரிக் சுரக்சா சன்கிதா சட்டத்தின் பிரிவு 218 ஆகியவற்றின் கீழ் முதலமைச்சரை சோத னையிடவும், விசாரணை நடத்தவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாகவும் அதற்கு முதல்வர்  ஒத்துழைக்க வேண்டும் எனவும்கூறப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த பிரதீப்குமார், டி.ஜே.ஆப்ரஹாம், மைசூரைச் சேர்ந்த சினேகமாயி கிருஷ்ணா ஆகிய மூன்று நபர்கள், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் ஊழல் நடந்துள்ளது என்றும்; எனவே சித்தராமையா மீது ஊழல் தடுப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநரிடம் அளித்த புகாரின் பேரில், ஆளுநர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது கர்நாடக அரசியல் அரங்கில் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தபடியே, அம்மாநில பாஜக, சித்தராமையா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூக்குரல் எழுப்பி யுள்ளது. இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை அவசரமாகக் கூடி, “ஆளுநரின் உத்தரவு சட்ட விரோதமானது; அரசியல் சட்டத்திற்கு எதிரானது; ஜனநாயகத்தின் மாண்புகளுக்கு எதிரானது; சித்தராமையா முதல்வர் பதவியிலிருந்து விலகமாட்டார்” என அறிவித்துள்ளது.

ஊழல் தடுப்பு விசாரணை என்ற பெயரில் ஏற்கெனவே பாஜக அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு வடிவங்களிலான தாக்குதல்களை ஒன்றிய பாஜக அரசு ஏவியுள்ளது. மாநில  ஆளுநர்களை தங்களது அரசியல் ஏஜெண்டு களாக பயன்படுத்தி, அவர்களது அதிகார வரம்புகளையும் மீறி இத்தகைய உத்தரவுகளை செயல்படுத்துகிறது மோடி அரசு. 

கர்நாடக ஆளுநர், முதல்வர் சித்தராமையா   மீதான விசாரணைக்காக, 2004ல் மத்தியப்பிரதேச மாநில அமைச்சர்கள் இருவர் மீதான விசாரணை நடவடிக்கைக்காக அம்மாநில ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை சுட்டிக்காட்டி நியாயப் படுத்தவும் செய்துள்ளார். அவர் கூறுவது போல பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது உண்மையே. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் அரசை நெருக்க டிக்கு உள்ளாக்கி ஆட்சியைக் கவிழ்க்கும் அற்ப நோக்கத்துடனே பாஜக ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆளுநர்களை அரசியல் கையாட்களாக பயன்படுத்தும் மோடி அரசின் திருவிளையாடல்களில் ஒன்றே இது.