பாங்காக், மே 15- தாமஸ் கோப்பை பேட்மிண்டனின் 73 ஆண்டுகால வரலாற்றில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாய்லாந்தில் பேட்மிண்டனின் மிக முக்கிய தொடர்களில் ஒன்று தாமஸ் கோப்பை. 1949 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி பெரிய அளவுக்கு சாதிக்க முடியவில்லை. இந்நிலையில், தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மே 8 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றது. இதில், ஆண்களுக்கான கால்யிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து அரையிறுதியில் டென்மார்க் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சரித்திரம்
இதனைத் தொடர்ந்து, கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், தாமஸ் கோப்பையை 14 முறை வென்ற இந்தோனேசியா அணியுடன் இந்திய இளம் படைகள் மல்லுக் கட்டின. ஆட்டத்தின் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்தி வீரர்கள் ஒரு செட்டையும் இழக்காமல், இறுதியாக 3-0 என்ற நேர் புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
பிரதமர் வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘‘சரித்திரம் படைத்தது இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்திய அணி வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் திறமையான அணியினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘தாமஸ் கோப்பை சாம்பியன்ஷிப்பை முதன்முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள் எனவும் இந்த வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்’’ எனவும் தெரிவித்துள்ளார்.
ரூ.1 கோடி பரிசு!
பேட்மிண்டன் வரலாற்றில் 14 முறை கோப்பையை வென்ற இந்தோனேசியாவை முதன்முறையாக வென்றிருப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். இத்தகைய சிறப்புமிகு வெற்றிக்கு உதவிய வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்தும் பாராட்டும் குவிந்து வருகின்றன. மேலும், தாமஸ் கோப்பை வென்று சரித்தரம் படைத்த இந்திய அணி வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.