அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் “ஒலிம்பிக் தங்கமகன்” நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தொடக்கத்தில் திணறிய நீரஜ் சோப்ரா, 4-ஆவது வாய்ப்பில் 88.13 மீ தூரம் ஈட்டியை எறிந்து 2-ஆவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கிரெணடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் (90.54 மீ) தங்கப்பதக்கமும், செக்குடியாசு வீரர் ஜேக்குப் வாட்லேஜ் (88.09 மீ) வெண்கலப்பதக்கமும் வென்றனர். நீரஜ் சோப்ரா வெறும் 0.04 மீ தூர வித்தியாசத்தில் ஜேக்குப் வாட்லேஜை பின்னுக்குத்தள்ளி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். நீரஜ் சோப்ரா சற்று அசத்திருந்தால் ஜேக்குப் வாட்லேஜ் வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பார்.
19 ஆண்டுகளுக்கு பிறகு
2003-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி சார்ஜ் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். அதன்பின் 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் தேசிய கொடியை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் பதக்க மேடையில் பறக்கவிட்ட நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.