வெல்லிங்டன் டெஸ்ட் : ஆஸ்திரேலியா அபார வெற்றி
3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை, ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலை யில், அடுத்ததாக 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வியாழனன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் கிரீன் (174) அபார சதத்தின் உதவியால் 383 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் லயனின் (4 விக்கெட்) பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்குள்சுருண்டது.
204 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, பிலிப்சின் (5 விக்கெட்) மிரட்டல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்து, நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயம் செய்தது.
கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி வழக்கம் போல லயனின் (6 விக்கெட்) சுழலை எதிர்கொள்ள முடியா மல் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டி களில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டநாயகனாக கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா) தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 8 அன்று நடைபெறுகிறது.
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நியூசிலாந்து ஆடுகளங்கள்
குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் கிரிக் கெட் மைதானங்கள் உயிரோட்ட தன்மை கொண்டவைகளாக இரு க்கும். அதாவது வேகப்பந்துவீச்சிற்கு ஏற்றதாக காணப்படும். இருநாட்டு மைதானங்களிலும் சுழற்பந்துவீச்சு அவ்வளவாக எடுபடாது என்ற நிலையில், தற்போது நியூசிலாந்து நாட்டின் மைதானங்கள் இந்திய துணைக்கண்ட மைதானங்களை போன்று மாறி வருகிறது. அதாவது சூழல் கலந்த வேகத்திற்கு அந்நாட்டு மைதானங்கள் முன்னுரிமை அளிக் கிறது. இதன் வெளிப்பாடாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சான்றாகும். மாறிவரும் பருவநிலை மாற்றங்களால் நியூசிலாந்து நாட்டின் மைதானங்கள் மாறியிருக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டபிள்யு.பி.எல் 2024
இன்று உத்தரப்பிரதேசம் - பெங்களூரு மோதல்
இந்தியாவில் ஆடவருக்கு ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதை போல மகளிருக்கும் டபிள்யு.பி.எல் (Women’s Premier League) என்ற பெயரில் கடந்தாண்டு முதல் டி-20 லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இரண்டாவது சீசன் பிப்ரவரி 23 அன்று தொடங்கியது. தில்லி, குஜராத், மும்பை, பெங்களூரு, உத்தரப்பிரதேசம் ஆகிய 5 நகரங்களின் பெயர்களில் அணிகள் களமிறங்கியுள்ள நிலையில், இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
லீக் ஆட்டங்கள் இரண்டு கட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் தற்போது கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் தில்லியில் நடைபெற உள்ளன. இந்நிலையில், திங்களன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் உத்தரப்பிரதேசம் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
உத்தரப்பிரதேசம் - பெங்களூரு
(11-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : மாலை 7:30 மணி
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி)