கோலியை பதவி விலகவேண்டாம் என்று எல்லோரும் கூறினோம். ஆனால், அவர் முடிவில் தீர்க்கமாக இருந்தார் என்று இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், இந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்குத் தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். மேலும், ஒருநாள் மட்டும் சோதனை போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.
கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இந்திய ஒருநாள் அணிக்கும் ரோஹித்தை கேப்டனாக அறிவிக்கவேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன்படி டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக ரோஹித்தை தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதிலளித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, கோலியை டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. வைட் பால் கிரிக்கெட்டின் இரண்டு ஃபார்மட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியான முடிவில்லை என்று கருதியதால், செலக்டர்கள் இந்த முடிவை எடுத்தார்கள் என்று தெரிவித்தார்.
ஆனால், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்குச் செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய விராட், நான் பதவி விலகுகிறேன் என்று சொன்னபோது யாரும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொள்ளவே செய்தனர் என்று தெரிவித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து கங்குலி மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நேற்று தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா, கோலியை பதவி விலகவேண்டாம் என்று எல்லோரும் கூறினோம். அதுவும் உலகக் கோப்பைக்கு முன்பு அந்த முடிவை எடுப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னோம். ஆனால், அவர் முடிவில் தீர்க்கமாக இருந்தார். அந்த முடிவில் அவர் பலநாள்களாக இருந்ததுபோல் தெரியும்போது, அதை மதிப்பதும் முக்கியம் என்று கூறினார். இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.