புதிய பந்துவீச்சு கட்டுப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தும்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) புதிய பந்துவீச்சு விதியை அறிவித்துள்ளது. அந்த விதியில் ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை வீச 60 வினாடி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அடுத்த ஓவரை 1 நிமிடத்திற்குள் வீச தயாராக வேண்டும். இந்த விதியை ஒரு அணி 3 முறை மீறினால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி-யின் இந்த புதிய விதி குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் பின்வருமாறு :
1. இக்கட்டான சூழ்நிலையில் எதிரணி பேட்டரை வீழ்த்த வியூகம் வகுக்க முடியாத சூழல் ஏற்படும்.
2. புதிய விதியால் கேப்டன்களுக்கு கடும் சிக்கல் உருவாகும். அடுத்த ஓவருக்கான வீரர்கள் தேர்வு, மற்ற வீரர்களுடன் ஆலோசனை செய்யும் வேலைகளில் பாதிப்பு ஏற்படும்.
3. இரு அணிகளுக்குள் பந்துவீச்சு டைமிங் முறையீடு மூலம் சண்டை உருவாகலாம்.
4. வீரர்களுக்கும், நடுவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படலாம்.
5. ஓவர் இடைவேளையில் தண்ணீர் அருந்துதல் முறை இனி கிடைக்காமல் போகலாம்.
6. யார் பந்து வீச வருகிறார்? அவரது பந்தை எப்படி பந்தாடுவது? என்ற வியூகத்தை புறந்தள்ளி, இவர் சரியான நேரத்தில் பந்துவீச வருகிறாரா? என்ற விளையாட்டை தாண்டி பேட்டர்கள் சோதனை செய்யும் காவலராக மாறும் சூழல் ஏற்படும்.
7. 5 ரன்களுக்காக இனிமேல் கடும் அலப்பறைகள் உருவாகும்.
எல்லாம் சாகிப் அல் ஹாசனால் வந்த வினை
நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் 38-ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய தாமதம் ஏற்படுத்தினார். இதனை விதிகள் மூலம் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹாசன் நடுவரிடம் சுட்டிக்காட்ட, பிட்ச் பகுதியில் காலடி வைக்காமலேயே “டைம் அவுட்” முறையில் ஆட்டமிழந்தார் மேத்யூஸ். சர்வதேச கிரிக்கெட்டில் “டைம் அவுட்” விதி முதன்முறையாக பயன்படுத்தப்பட்டதால், இந்த விவகாரத்தை ஜீரணிக்க முடியாமல் இலங்கை அணி கொதித்தது. எனினும் இந்த விதி ஐசிசி விதிகளில் ஒன்று என்பதால் வேறு வழியில்லா மல் ஏற்கவேண்டியதாயிற்று. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் “பந்துவீச்சு டைமிங் (BOWLING TIMING)” முறை ஐசிசி-யால் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டது அல்ல. சாகிப் அல் ஹாசனால் வந்தது என்று கூட கூறலாம். அவர் பேட்டிங் பக்கம் இருந்த விதியை செயல்படுத்த, பதிலுக்கு ஐசிசி புதிய விதியை உருவாக்கி அமல்படுத்தியுள்ளது. இனிமேல் ஒவ்வொரு ஓவரும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிச. 10 முதல் தேசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான “கேலோ இந்தியா” பாரா விளையாட்டுப் போட்டிகள் தில்லியில் டிசம்பர் 10 அன்று தொடங்கி 17 வரை நடைபெறும் என்றும், தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் போட்டி என மொத்தம் 7 பிரிவுகளில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். நடைபெறும் இடம்: தில்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் திடலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.