“ஒரு ஓவர்... 6 பந்துக்கள்... அந்த ஆறு பந்துகளும் கணிக்க முடியாதவை... அதுவே வார்ன்...!”
பிஷன் சிங் பேடி, எஸ். வெங்கட்ராகவன், எரப்பள்ளி பிரசன்னா, சந்திரசேகர், எல்.சிவராமகிருஷ்ணன் விளையாடிய அந்த காலகட்டத்தில் சுழல் பந்து முயற்சி மிகவும் பிரபலமானது. காலம் மாற மாற சுழற்பந்து மீதான ரசிகர்களின் மோகம் மாறத்தொடங்கியது. அதற்கு 1960 -70-களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துகளின் ஆதிக்கமாகும்.
அந்த காலகட்டத்தில் சுழற்பந்து வீச்சை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாராது வந்த மாமணி போல் வந்தவர் ஷேன் வார்னே. சுழற் பந்தில் ஒரு சுழற்சி செய்து அன்றைய உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மாயாஜாலத்தால் ரசிகர்களை சுழற்பந்து வீச்சு பக்கம் சாய்த்தார். இவ்வளவு ஏன்? வார்னே மட்டும் இல்லை என்றால் சுழற்பந்து வீச்சை யாரும் ஒரு கலையாகவே கற்று கூட இருக்கமாட்டார்கள்.
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் பிளாக் ராக் பகுதியில் ஜெர்மனி தாய் தந்தையருக்கு பிறந்தவர் ஷேன் வார்னே. கால்பந்து விளையாட்டில் உள்ளூர் அணிகளுடன் விளையாடி வந்தார். அதே நேரத்தில்,1983-84 ஆம் ஆண்டுகளில் மெல்போர்ன் பல்கலைக்கழக கிரிக்கெட் அணியில் விளையாடினார். இதனால், 90களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட ஓராண்டிலேயே தொழில்முறை கிரிக்கெட் வீரராக உருவெடுத்து முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஒரு கண் நீல நிறமாகவும் மற்றொரு கண் பச்சை நிறமாகவும் இருந்த ஷேன் வார்னேவை 1992 ஆம் ஆண்டில் சிட்னி மைதானம் தான் கிரிக்கெட் உலகுக்கு அறிமுகம் செய்தது. அந்த மைதானத்தில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் ரவி சாஸ்திரியின் விக்கெட்டை வெட்டி தனது முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார். ஆனாலும் தொடக்க காலத்தில் அவரது பந்து வீச்சு பெரிதாக பேசப்படவில்லை. விக்கெட்டும் வீழ்த்த முடியவில்லை. இதனால் ஓரிரு போட்டிகளில் நீக்கப்பட்டார்.
மீண்டும் களமிறங்கிய வார்னே, தனது மாயாஜால பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ஒரே நேரத்தில் ஆப் ஸ்பின், லெக் ஸ்பின் கலவை பந்துகளை வீசத் துவங்கினார். ஒரு ஓவரில் 6 பந்துகள். அத்தனை பந்துகளையும் விதவிதமாக வீசி சச்சின், லாரா, சேவாக், ஜெயசூர்யா, ஜாக் காலிஸ், ராகுல் திராவிட், சையீத் அன்வர் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் பந்துகளை கணித்து விளையாட முடியாமல் தனது மாயாஜால சூழலில் தடுமாற வைத்துள்ளார். அவரது சில சூழல் பந்துகள் காலத்தால் அழியாதவை. பேட்ஸ்மேன்களை அதிர வைக்கும் அளவுக்கு தாறுமாறாக பந்தை திருப்பி தெறிக்க விட்டுள்ளார்.
சிம்ம சொப்பனம்!
1992ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரைக்கும் 15 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய சுழற்பந்து மன்னன் ஷேன் வார்னே, உலக கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலில் 700 விக்கெட்டுகளை கடந்தவர் என்ற பெருமை பெற்றவர். மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 194 ஆட்டத்தில் 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 301போட்டிகளில் 1319 விக்கெட்டுகளை சாய்த்துள்ள அவர், ‘ஏ’ அணிக்காக 311 ஆட்டங்களில் விளையாடி 473 விக்கெட்டுகளையும், 20 ஓவர் விளையாட்டில் 73 போட்டியில் 50 என்று ஒட்டுமொத்தமாக 1724 போட்டிகளில் 2,763 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன் 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்திருக்கிறார். இத்தகைய அற்புத சாதனையை நிகழ்த்தி இருக்கும் மனிதரும் இவரே.
கிரிக்கெட் உலகில் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இவரது சுழல் பந்தை எதிர்கொண்டு வெற்றிபெற்றதில் சச்சினுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. ஆனாலும், வார்னே வீசும் மாயாஜால பந்துகளை அடிக்க முடியாமல் திணறிய டெண்டுல்கரை பலமுறை வீழ்த்திதான் ஒரு ஜாம்பவான் என்பதை நிரூபித்து காட்டியவர் ஷேன் வார்னே .
ஆல் டைம் பெஸ்ட்!
தனது சூழல் ஜால பந்து வீச்சு மூலம் 37 முறை 5 விக்கெட்டுகளையும் 10 தடவை 10 விக்கெட்டுகளை யும் அள்ளி ஆஸ்திரேலிய அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சுழற்பந்து வீச்சாளர் என்றாலே “ஆல் டைம் பெஸ்ட்” வரிசையில் ஷேன் வார்னேக்கு ஒரு தனி இடம் உண்டு. இவ்வளவு புகழ் இருந்தபோதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை உட்கொண் டது, மைதானத்தில் சிகரெட் பிடித்தது, போக்குவரத்து விதிகளை மீறியது என்று அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கியதும் உண்டு. ஆனாலும், நூற்றாண்டின் ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்கள் பட்டியலில் முதன்மை வகிப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
52 வயது நிரம்பிய ஷேன் வார்னேவின் திடீர் மரணம் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் சக விளையாட்டு வீரர்களையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்து உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய அரசாங்கமும் அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்கிறது. இந்த மகத்தான கிரிக்கெட் வீரருக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்களும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வார்னே மறைந்தாலும் அவருடைய நினைவுகள், சாதனைகள் கிரிக்கெட் இருக்கும் வரை மறையாது. கண்ணீர் மல்க விடை கொடுப்போம்!
- சி. ஸ்ரீராமுலு