மும்பை ரஞ்சி அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார்.
பிசிசிஐ நடத்தும் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்கிறது. இதில் சி பிரிவில் மகாராஷ்டிரா, சர்வீஸ் அணிகளுடன் இடம்பெற்றுள்ள மும்பை அணி ஜனவரி 13 அன்று மஹாராஷ்டிரத்துக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது.
இந்நிலையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணி இளம் வீரர் பிருத்வி ஷா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். 22 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் இடம்பெற்றார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டதால் விளையாட முடியாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ள அர்ஜுன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
மும்பை அணிக்கு முதல் முறையாக பிரித்வி ஷா தலைமை தாங்குகிறார். 2018-ல் பிருத்வி ஷா தலைமையில் இந்திய அணி யு-19 உலகக் கோப்பையை வென்றது. மேலும், மும்பை அணியில் யாஷஸ்வி ஜெயிஸ்வால், சர்பராஸ் கான், ஆதித்யா தரே, ஷிவம் டுபே, தவால் குல்கர்னி போன்ற பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். மும்பை அணி இதுவரை 41 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.