tamilnadu

img

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா!

உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் சாதனையை இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா முறியடிக்க உள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்றன. நேற்று முன்தினத்துடன் ‘லீக்‘ ஆட்டங்கள் முடிந்தன. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இரு நாட்கள் ஓய்வுக்கு பிறகு ‘நாக் அவுட்’ போட்டிகள் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா புதிய சாதனையை படைக்க உள்ளார். அவர் இன்னும் 27 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.     

கடந்த 2003-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 673 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.