பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
12ஆவது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று வெலிங்டனில் நடைபெற்று வந்த முதல் அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின. மழைக்காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்த போட்டியில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிகள் 45 ஓவர்களில் 3 இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக முதலில் களமிறங்கிய தொடக்க வீராங்கனைகள் ரேச்சர் ஹெய்ன்ஸும், அலிஸா ஹீலியும் முதல் விக்கெட்டுக்கு 32.4 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தனர்.
அலிசா ஹீலி 107 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் தனது ஆதிக்க இன்னிங்ஸில் 17 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். இது அவருடைய 4ஆவது ஒருநாள் சதமாகும். ஹெய்ன்ஸ் 100 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார்.
306 ரன் இலக்குடன் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 37 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.