games

img

விளையாட்டு...

ஆசியக் கோப்பை கபடி : இந்திய அணி சாம்பியன்

இந்தியா, ஈரான், சீன தைபே, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் ஆகிய 6 நாடுகள் பங்கேற்ற 9-வது ஆடவர் ஆசிய கபடி  சாம்பியன்ஷிப் தொடர் தென் கொரியா நாட்டின் பூஷன் நகரில் கடந்த ஜூன் 27 அன்று தொடங்கியது.  ரவுண்ட் ராபின் முறையில் நடை பெற்ற இந்த தொடரில் 7 முறை ஆசிய சாம்பியனான இந்தியா தோல்வி யை சந்திக்காமல் இறுதிக்கு முன்னேறிய நிலையில், ஒரே ஒரு தோல்வியுடன் (இந்தியாவுடன்) ஈரான் அணி இறுதிக்கு முன்னேறியது.  வெள்ளியன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே  ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 42-32 என்ற கணக்கில் வெற்றி  பெற்று, 8-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது இந்திய அணி.

நட்சத்திர வீரர்கள் இல்லாமல் சாதித்த இந்தியா

ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சார்பில் வெறும் 6 முன்னணி வீரர்கள் மட்டுமே சென்றனர். அதாவது பவன் செராவத் (கேப்டன்), நவீன் குமார், சுர்ஜீத் சிங், அஸ்லாம் இமாந்தீர், நிதிஷ் குமார், விஷால் பரத்வாஜ் ஆகியோர் மட்டுமே முதல் தரத்தில் விளையாடக் கூடியவர்கள். மற்ற வீரர்கள் இரண்டாம் தர வீரர்கள் ஆவர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பவன் செராவத் (கேப்டன்), நவீன் குமார், சுர்ஜீத் சிங் மட்டுமே சர்வதேச தர வீரர்கள். வெறும் 3 பேரை மட்டும் வைத்து இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.  இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றதற்கு முதல் காரணம் கேப்டன் பவன் செராவத்தின் கலக்கலான ஆட்டம்தான். அவர் மட்டும் நடப்பு சீசனில் இடம்பெறவில்லை என்றால் சற்று சிக்கலாகி இருக்கும். பவன் செராவத் புரோ கபடி தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் : இன்று தொடக்கம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னை நகரின் 17 இடங்களில் சனியன்று தொடங்குகிறது. ஜூலை 25 வரை நடைபெறும் இந்த தொடரில் மாநிலம் முழுவதும் இருந்து 27,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், நடுவர்கள், என்சிசி மாணவர் படைகள், தன்னார்வலர்கள் பங்கேற்கிறார்கள். அனைவரும் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறைகள், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும் பேருந்து வசதி என சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.