games

img

ஆசியக் கோப்பை ஹாக்கி - தமிழ்நாடு 2023

இன்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள்

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் 7-வது சீசன் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. புதனன்று நடைபெறும் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தியா ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இந்த ஆட்டம் எவ்வித பின்விளைவையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய ஆட்டங்கள்

ஜப்பான் - சீனா
நேரம் : மாலை 4:00 மணி
மலேசியா - தென் கொரியா
நேரம் : 6:15 மணி
இந்தியா - பாகிஸ்தான்
நேரம் : 8:30 மணி

இடம் : சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், சென்னை
 

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

2 நாள் விடுமுறை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட களைப்பை போக்க 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளியன்று (ஆக.11) காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன. 

திங்களன்று நடைபெற்ற 5-வது நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, பெனால்டி சூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி பலமானது என்றாலும், வெற்றிக்காக நைஜீரியா  அணி மிக கடுமையாக போராடியது. நைஜீரியாவின் ஆட்டத்தை இங்கிலாந்து ரசிகர்கள் கூட பாராட்டினர். அந்தளவுக்கு நைஜீரிய வீராங்கனைகள் தடுப்பாட்டத்தில் பிரமிக்க வைத்தனர்.  ஆனால் பெனால்டி சூட் அவுட்டில் நைஜீரியா  வீராங்கனைகள் சொதப்பலால்  வெளியேறியது. உலகக்கோப்பையில் வெளியேறியதை தாங்கிக்கொள்ள முடியாமல் நைஜீரியா வீராங்கனை கள் மைதானத்திலேயே கதறி அழுதனர். இதனை கண்ட இங்கிலாந்து வீராங்கனைகள் வெற்றி கொண்டாட்டத்தை கைவிட்டு, நைஜீரியா வீராங்கனைகளை கட்டியணைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறினர்.  இங்கிலாந்து வீராங்கனைகளின் இந்த செயல்பாட்டிற்கு போட்டி நடைபெற்ற தெற்கு ஆஸ்திரேலியாவின் சன்கார்ப் மைதானத்தில் குவிந்து இருந்த ரசிகர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இதுபோக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் டிரெண்ட் ஆகி வருகிறது.

காலிறுதியில் கொலம்பியா

செவ்வாயன்று நடைபெற்ற நாக் அவுட் சுற்றின் 7-வது ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு  முன்னேறியது. மகளிர் கால்பந்து உலகில் இளம் கன்றான ஜமைக்கா முதல் முறையாக நடப்பு  சீசனில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இளம் வீராங்கனைகள் அதிகம் இருப்பதால் நடப்பு சீசனில் ஏதாவது அதிர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது. இதுவரை நடைபெற்ற 9 உலகக்கோப்பை கால்பந்து சீசனில் ஜமைக்கா 2 சீசனில் (2019, 2023) மட்டுமே தகுதி பெற்றது. கடந்த சீசனில் குரூப் சுற்றோடு ஜமைக்கா வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

லபுஸ்சாக்னே நீக்கம் அபாயகரமானது

ஆஸ்திரேலிய அணி முக்கிய நட்சத்திர வீரரும், சூப்பர் பார்மில் உள்ள பேட்டருமான மார்னஸ் லபுஸ்சாக்னே (29)  இந்தியாவில் நடைபெறும் 13-வது சீசன் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக இரண்டாம் தர வீரர்கள் பலரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவிற்கு அனுப்புகிறது. லபுஸ்சாக்னே நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். காரணம் லபுஸ்சாக்னே நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்டர் ஆவார். அதாவது லாரா, டிராவிட் போன்றோரைப் போல நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். டெஸ்ட் போட்டிகளில் இவரை ஆட்டமிழக்க வைப்பது மிக சிரமமான விஷயம் ஆகும். லபுஸ்சாக்னே மிதமான வேகத்தில் ரன் குவிப்பவர்தான். அதற்காக டி-20 போட்டிகளில் நீக்குவது சரியான தாக இருக்கும். ஆனால் 50 ஓவர் கொண்ட பெரிய தொடரில் அவரை ஏன் ஆஸ்திரேலிய அணி நீக்கியது எனதெரியவில்லை.