ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. சனியன்று சால்ட் லேக் மைதானத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை 2- 1 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆட்டம் நிறைவுபெற்ற தருணத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முதலில் வாக்குவாதமாக நகர்ந்து கொண்டிருந்த வாய்ச்சண்டை அடுத்த சில வினாடிகளில் கைகலப்பாக மாறியது. ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்துவின் முகத்தில் அடித்துள்ளார். இதை கண்ட இந்திய ரசிகர்கள் பெவிலியன் பகுதியில் இருந்து மைதானத்தில் தாவி குதிக்க முயன்றனர். அவர்களை பெவிலியனில் இருந்து கீழே இறங்கிவிடாமல் கொல்கத்தா காவல்துறையினர் சாமர்த்தியமாக தடுத்தனர். அவ்வாறு தடுக்காமல் விட்டிருந்தால் ஆப்கானிஸ்தான் வீரர்களை இந்திய ரசிகர்கள் தாக்கிருப்பார்கள். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை கால்பந்து இறுதி சுற்று ஆட்டத்தை விட இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. கடைசி நிமிடங்களில் இரு அணி வீரர்களும் போராடியது, கோலடித்தது எல்லாமே வேற லெவல் விஷயம் தான். இந்த ஆட்டத்தில் அருமையாக விளையாடிய இரு அணிகளை பாராட்ட பாராட்டுச் செய்தி எழுதுவதற்குள் சண்டை, சச்சரவால் சர்ச்சை எழுதியது தான் மிச்சம்.