நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை தோற்கடித்து கால் இறுதிக்கு வடக்கு ஆப்பிரிக்காவின் மொராக்கோ அணி முன்னேறி, அதிலும் போர்ச்சுக்கல்லை வீழ்த்தியுள்ளது. லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் மட்டும் குரோஷியாவுடன் சமன் செய்து, மற்றொரு பலம் வாய்ந்த ஐரோப்பிய அணியான பெல்ஜியம் அணியை தோற்கடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிகழ்வே, கால்பந்து ரசிகர்களை ‘அதிர்ச்சிக்குள்ளாக்கி’ மொராக்கோ மக்களை உறைய வைத்த நிலையில், போர்ச்சுக்கலையும் வீழ்த்தியது மொராக்கோ அணியின் சாதனையாகும். இந்த வெற்றி அதிர்ஷ்டத்தாலோ, தற்செயலாகவோ கிடைத்தது அல்ல. இளம் விளையாட்டு வீரர்களை பயிற்றுவித்து சாதித்த வெற்றியாகும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இதுவரை ஒரு அணியும் அரை இறுதிக்கு முன்னேறவில்லை. ஆனால், மொராக்கோ அணி அரை இறுதிக்குள் நுழைந்து, ஆப்பிரிக்க கால்பந்தாட்டத்தை புத்துயிர் பெற செய்துள்ளது. இதற்கு முன்பு 1990 ல் கேமரூன், 2002ல் செனகல், 2010ல் கானா, தற்போது மொரோக்கோ என்று நான்கு அணிகள் மட்டும் தான் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி வந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு கானா, உருகுவே அணியுடன் மோதிய பொழுது கானா அடித்த பந்தை உருகுவே நட்சத்திர வீரர் சொர்ஸ் கேவலமான முறையில் கையால் தடுத்து கானாவின் அரை இறுதிக் கனவை தகர்த்தார். இப்பொழுது மொராக்கோ, ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கால்பந்தாட்ட பிரதிநிதியாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. உலக கால்பந்து போட்டியில் இதுவரை 13 ஆப்பிரிக்க நாடுகள் கலந்து கொண்டு உள்ளன. கேமரூன் (8), மொராக்கோ (6), நைஜீரியா (6), டுனீசியா(5), அல்ஜீரியா(4), கானா (4), ஐவரி கோஸ்ட் (3), எகிப்து (3), செனகல்(3), தென் ஆப்பிரிக்கா (3), அங்கோலா (1), காங்கோ (1), டோகோ (TOGO) (1) என்ற விகிதத்தில் போட்டியில் கலந்து கொண்டுள்ளன. 1934ஆம் ஆண்டு முதன்முதலாக எகிப்து அணி ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொண்டது. அதன் பிறகு 36 ஆண்டுகள் கழித்து 1970 ஆம் ஆண்டு மொராக்கோ அணி உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொண்டது.
கால்பந்தாட்டத்தில் தொழில்நுட்பம் என்பது ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்டது. ஐரோப்பிய அணிகள் தொழில்நுட்ப ஆட்டத்தை முன்னிறுத்தி; தென் அமெரிக்கா அணிகள் அழகியல் ஆட்டத்தை முன்னிறுத்தி; ஆப்பிரிக்க அணிகள் உடல் வலுவை முன்னிறுத்தி களம் இறங்குகிறார்கள். 1982ஆம் ஆண்டுகளில் இருந்து உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தை பார்த்து வரும். ரசிகர்களைக் கேட்டால், தற்போது பொதுவாக அழகியல் ஆட்டம் குறைந்து இருப்பதாக கூறுவார்கள். மந்திரக் கால் மரடோனா முதல் ஐரோப்பாவின் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் தென்அமெரிக்காவின் பிரேசில் போன்ற நாடுகளை சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஆட்டம் அழகியல் சார்ந்ததாக இருக்கும். பிரேசில் நாட்டின் ரொனால்டோ,ரொனால்டினோ ஆகியோர்களின் உடல் மொழிகள் காணக் கிடைக்காத காட்சிகளாக மைதானங்களில் அரங்கேறிக் கொண்டிருக்கும். ராபர்ட் டு கார்லோ சின் தொலைவில் இருந்து பந்தை கோல் கம்பத்திற்குள் செலுத்தும் நிகழ்வுகள் இதுவரை தற்போதைய உலகக் கோப்பை ஆட்டத்தில் கிடைக்கவில்லை. தற்பொழுது ஐரோப்பிய அணிகளில் அவ்வாறு கண்டுபிடிப்பது அரிதாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் எம்பாபே, ஜிரெட், தென் அமெரிக்காவின் மெஸ்ஸி மற்றும் பிரேசில் வீரர்கள் சிலரிடம் அழகியல் தன்மை மேலோங்கி இருக்கிறது.
ஆப்பிரிக்க வீரர்கள் ஐரோப்பிய கிளப்புகளில் இப்பொழுது கலக்கி வருகிறார்கள் என்று சொன்னால் மிகை ஆகாது. பாலன் டி ஓர் (Ballon d’or) என்ற பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்டு, சர்வதேச கால்பந்து ஆட்டத்தின் உயரிய விருதாக மாறி இருக்கக்கூடிய விருதுக்கு போட்டியிடக் கூடிய அளவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள் முன்னேறி வருகிறார்கள். இருந்தும், அந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஐரோப்பிய நாடுகளைவிட, தென் அமெரிக்கா நாடுகளைவிட, வெகு தொலைவில் உள்ளது. கால்பந்தாட்ட அமைப்புகள் நிதிப் பற்றாக்குறையில் எப்பொழுதுமே சிக்கித் தவிக்கின்றன. பிரான்ஸ் கால்பந்தாட்டக் கழக 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் 257.0 மில்லியன் டாலர் ஆகும். ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டு 2020 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட கழகத்தின் பட்ஜெட் வெறும் 12 .7 மில்லியன் டாலர் மட்டுமே.
மற்றொரு காரணம் மிகக் குறைவான அணிகளே உலகக் கோப்பைக்கு வர முடிகிறது. 1998 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கண்டத்திற்கு ஐந்து அணிகள் என்று ஒதுக்கப்பட்டது. அவற்றில் மூன்று அணிகள் மட்டும் தான் அப்போது தரம் வாய்ந்ததாக இருந்தது என்று அறிவிக்கப்பட்டதால் உள்ளே நுழைவதற்கு மிகப்பெரிய கடினமாக இருந்தது. 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ இணைந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இருக்கிறார்கள். அந்த போட்டியில் 32 அணிகளுக்கு மாறாக 48 அணிகள் என்று உயர்த்தப்பட உள்ளது. இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது காரணம் நீண்டகால திட்டமிடல் என்பது ஆப்பிரிக்க கால்பந்தாட்டக் கழகத்திடம் இல்லை. குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தேவை.
ஆப்பிரிக்க அணியின் வீரர்கள், நட்சத்திர வீரர்களை நம்பி மட்டும் களத்தில் இறங்க முடியாது என்பதை கற்று உணர்ந்திருக்கிறார்கள். அதில் சில மாற்றங்களும் தேவைப்படுகிறது. ஆப்பிரிக்க வீரர்களுக்கும் ,ஆசிய வீரர்களுக்கும் வெற்றி பெறுவதற்கு மைதானத்தில் மன அழுத்தம் ஒரு தடையாக இருக்கிறது. பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளின் வீரர்கள் பந்தை எடுத்தவுடன், அதன் போக்கிலேயே பதற்றப்படாமல் கொண்டு செல்கிறார்கள். இதற்கு மாறாக ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்கள் பந்து கிடைத்தவுடன் அதன் மீது அழுத்தம் செலுத்தி பதற்றப்படும் நிலை ஏற்படுகிறது.இதற்கான பயிற்சி தேவை என்று விளையாட்டு நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆப்பிரிக்க விளையாட்டுக் கழகங்கள் பயிற்சியாளர்களுக்கான முதலீட்டையும், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சிக்கான முதலீட்டையும், அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இருப்பினும், ஆப்பிரிக்க விளையாட்டு வீரர்களின் தற்போதைய முன்னேற்றம் மிக பிரமிக்கத்தக்கது. நாட்டின் அணிக்காக மட்டுமல்ல, ஐரோப்பிய நாட்டில் நடக்கக்கூடிய அனைத்து கிளப்களிலும் ஆப்பிரிக்க நாட்டு வீரர்களின் அசத்தலான ஆட்டம் மற்றவர்களை ஈர்க்கத் துவங்கி உள்ளது. ஆப்பிரிக்காவின் மொராக்கோ தற்போது மைதானத்தில் மட்டுமல்ல; கால்பந்து விழாவில் மக்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது.