games

img

விளையாட்டு...

பாரா ஒலிம்பிக் 2024

கொடி, நாட்டின் பெயர் இல்லாமல் 
2 தங்கப்பதக்கத்தை அள்ளிய பெலாரஸ் வீரர்

17ஆவது சீசன் பாரா ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புதனன்று சிறப்பு கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது. செப்டம்பர் 8 வரை நடைபெறும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் 169 நாடுளைச் சேர்ந்த 4,400  வீரர் - வீராங்கனைகள் களமிறங்கியுள்ள நிலையில், கொடி, நாட்டின் பெயர் இல்லாமல் 2 தங்கப் பதக்கத்தை அள்ளிய பெலாரஸ் வீரர் புதிய வரலாறு படைத்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடை யே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்காக ரஷ்யாவிற்கு ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் நாட்டிற்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நல்லெண்ண அடிப்படையில் ரஷ்யா, பெலாரஸ் வீரர் - வீராங்கனை கள் கொடி, நாட்டின் பெயர் இல்லாமல் பாரீஸ் ஒலிம்பிக்கில் (பொது மற்றும் பாரா) பங்கேற்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

அதன்படி பாரா ஒலிம்பிக் தொடரின் ஆடவர் நீச்சல் பிரிவில் களமிறங்கிய பெலாரஸ் வீரர் போகி இகார் 100 மீ பட்டர்பிளை, 100 மீ பேக் ஸ்ட்ரோக் பிரிவு களில் (எஸ் -13) அடுத்தடுத்து தங்கப் பதக்கம் வென்று மிரட்டியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்
ஜோகோவிச்சை புரட்டியெடுத்த 25 வயது இளங்கன்று

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கிய நிலையில், தற்போது இந்த தொடரில் ரவுண்ட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சனியன்று அதிகாலை (இந்திய நேரப்படி) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரரும், தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (37), தரவரிசையில் 28ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் பாப்ரியனை (25) எதிர்கொண்டார். 

பாப்ரின் டென்னிஸ் உலகிற்கு அதிகம் அறிமுகம் இல்லா  நபர் என்ற நிலையில், 6-4, 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை புரட்டியெடுத்து பாப்ரின் 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜோகோவிச் போல லோரன் சோ (இத்தாலி), செல்டான் (அமெரிக்கா), ஜீரி (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினர். 

சென்னை “பார்முலா 4” கார் பந்தயம் பார்க்க செல்வோர் கவனத்திற்கு...

தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர “பார்முலா 4” கார் பந்தயம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது. “பார்முலா 4” கார் பந்தயம் நடைபெறும் இடம் மற்றும் பார்வையாளர்கள் இடத்திற்குள் எந்தெந்த பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என தமிழ்நாடு அரசு சார்பில் விரிவாக கூறப்பட்டு உள்ளது. 

அதன் விபரம் : 

1. தண்ணீர்‌ பாட்டில்கள்‌ / கண்ணாடி பாட்டில்கள்‌
2.டிரோன்கள்‌ அல்லது வேறு ஏதேனும்‌ அங்கீகரிக்கப்படாத பறக்கும்‌ சாதனம்‌. 
3. புகைபிடிக்கும்‌ சாதனங்கள்‌/பொருள்கள்‌
4. தொழில்முறை ஆடியோ ரெக்கார்டிங்‌ உபகரணங்கள்‌ - அனைத்தும்‌ (ஊடகங்கள்‌ / பத்திரிகை பணியாளர்களை தவிர). 
5. தொழில்முறை கேமராக்கள்‌ மற்றும்‌ தொழில்முறை பதிவு உபகரணங்கள்‌ 
6. தனியார்‌ வாகனங்கள்‌ 
7. இழிவு அடையாளங்கள்‌ அல்லது பதாகைகள்‌ - சாதி, மதம்‌, பாலினம்‌, மதம்‌ மற்றும்‌ இனம்