ராகுல் டிராவிட்டிற்கு சிறப்பு கவுரவம் அளித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போன்று தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் என்ற பெயரில் டி-20 லீக் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டின் டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் - திண்டுக்கல் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக இருக்கும் திண்டுக்கல் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. திண்டுக்கல் அணிக்கு இது முதல் கோப்பை என்ற நிலையில், இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பை ஏற்றுக்கொண்ட ராகுல் டிராவிட் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணிக்கு டிராவிட் கையால் கோப்பையை வழங்க வைத்து சிறப்பு கவுரவம் அளித்தது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு நல்ல நிலையில் பயிற்சி அளித்து வந்த ராகுல் டிராவிட் அரசியல் காரணங் களால் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து துரத்தப்பட்டார். இது இந்திய ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை பெற்ற நிலையில், ராகுல் டிராவிட்டிற்கு ஆதரவாகவும், அவருக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் டிஎன்பிஎல் தொடர் இறுதி ஆட்டத்தின் கோப்பை வழங்கும் நிகழ்வு மூலம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவருக்கு சிறப்பு கவுரவம் அளித்துள்ளது.
ஒலிம்பிக் திருவிழா - 2024
உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்க வாய்ப்பு
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மட்டுமே பதக்க வேட்டை நிகழ்த்தி வரும் நிலையில், துப்பாக்கிச் சுடுதல் ஸ்கீட் பிரிவில் இந் திய கலப்பு இரட்டையர் பிரிவு அணி வெண்கல பதக்கத்துக் கான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்தியாவின் மகேஸ்வரி சவுகான், ஆனந்த் ஜீத்சிங் ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு சீனா வின் லியு - ஜியாங் ஜோடியை எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் மற்ற சுற்று போட்டிகள் நிறைவுபெற்ற பின் நடை பெறும் என்பதால், திங்களன்று மாலை 5 அணி நிலவரப்படி போட்டி நடை பெறும் நேரம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
1.85 லட்சம் மக்கள் வாழும் செயின்ட் லூசியா குட்டித்தீவிற்கு தங்கம்
செயின்ட் லூசியா என்பது வட அமெரிக்காவில் உள்ள குட்டித்தீவு ஆகும். 238 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த தீவில் மொத்தமே 1.85 லட்சம் மக்கள் வாழுகின்றனர். உலக வரைபடத்தில் லென்ஸ் போட்டு தேடினால் மட்டுமே தெரியும் என்ற நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தடகளத்தில் 2 பேர், படகு போட்டி, நீச்சலில் தலா ஒருவர் என 4 பேர் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிருக்கான 100மீ ஓட்டப்பந்தயத்தில் செயின்ட் லூசியா தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. மகளிருக்கான 100மீ ஓட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் ஒலிம்பிக்கில் 4 முறை பதக்கம் வென்ற ஜமைக்கா நாட்டின் ஷெல்லி காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் நடப்பு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்காவின் ஷிக்காரிய ரிச்சர்ட்சன் முதலிடத்துடன் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகை யில் இறுதிப்போட்டியில் செயின்ட் லூசியா தீவின் ஜூலியன் ஆப்பிரட் (10.72 வினாடியில்) என்ற வீராங் கனை தங்கப்பதக்கம் வென்று அசத்தி யுள்ளார். அமெரிக்க வீராங்கனை ஷிக்காரியா ரிச்சர்ட்சன் (10.87) வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஆன மெலிசா ஜெபர்ஸன் (10. 92) வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
150 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒலிம்பிக்கில் 5 பதக்கம் கூட வெல்ல முடியாமல் திணறி வரும் நிலையில், வெறும் 1.85 லட்சம் மக்கள் தொகை கொண்ட செயின்ட் லூசியா ஒலிம்பிக் தொடரின் நட்சத்திர பிரிவான மகளிர் 100மீ ஓட்டப்பந்த யத்தில் தங்கம் வென்று இருப்பது விளையாட்டு உலகில் பலத்த பாராட்டுகளை பெற்றுள்ளது.