‘‘விளையாட்டு உலகில் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற குழு விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உலக சாதனை படைத்து வருகின்றனர். பெண்கள் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும், சாதனை படைத்தாலும் ஊடகங்கள் பெரிதாக பேசுவதுமில்லை. விளம்பர நிறுவனங்களும் கண்டு கொள்வதும் கிடையாது. இவை அனைத்தையும் தாண்டி ஒரு சில வீராங்கனைகளின் சாதனைகள் மட்டும் பேசப்படுகிறது. அத்தகைய வீராங்கனைகளில் ஒருவர் தான் அலெக்ஸியா புடெல்லாஸியா’’.
ஆரம்பமே அசத்தல்!
பார்சிலோனாவுக்கு வெளியில் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறிய நகரமான மொல்லெட் டெல் வால்லெஸில் பிறந்து உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் இளங்கலையை முடித்ததும் பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் சேர்ந்தார். ஆனாலும், கால்பந்து விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்தினார். கூடைப்பந்து விளையாடும் குடும்பத்தில் பிறந்தாலும் சிறு வயது முதல் கால்பந்து விளையாட தொடங்கினார். 6 வயதில் பயிற்சியை தொடங்கி 12 வயதில் உள்ளூர் போட்டிகளில் ஆடத் தொடங்கிய அலெக்ஸியாவின் ஆட்டத்தை பார்த்த பலரும் அசந்து போனார்கள். உள்ளூர் போட்டியாளர்களை போல் அவரும் சபாடெல்லாவில் இருந்து தனது கால்பந்து வாழ்க்கையை துவக்கினார். பார்சிலோனாவின் இளைஞர் பயிற்சி முகாமில் ஒரு வருடகாலமும், ஆர்.சி.டி எஸ்பான்யோ கால்பந்து பயிற்சி பள்ளியில் இளைஞர்களுடன் நான்காண்டு காலமும் அங்கேயே தங்கி கால்பந்தின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். கால்பந்தில் குழந்தை நட்சத்திரமாக கோலோச்சிய அலெக்ஸியா, 16ஆவது வயதில் எஸ்பான்யோ அணிக்கு எதிராக முதன் முதலாக அறிமுகமானார். அதன்பிறகு, ஒரு வருடம் லெவாண்டா கிளப் அணிக்காக 34 போட்டிகளில் விளையாடி 15 கோல்கள் அடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார். அதன் தொடர்ச்சியாக, ஸ்பெயின் ஜூனியர் கால்பந்து அணியின் விளையாட்டுப் பாத்திரமாகவே மாறினார். சர்வதேச அளவில் 17 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டியில் தனிப்பட்ட நபராக கோல் மழை பொழிந்தால் இவருக்கு சிறந்த வீராங்கனைக்கான அங்கீகாரமும் கிடைத்தது.
சுழலும் பம்பரம்...
இடது கால் வீராங்கனையான அலெக்ஸியா, தனது அசாத்திய திறமையால் எதிரணி வீரர்களிடமிருந்து பந்தை லாவகமாக கடத்திச் சென்று கோல் அடிப்பதிலும் பந்தை பாஸ் செய்து கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவரே.
மிகச்சிறந்த அட்டாகிங் மிட்ஃபீல்டர் என்பதால் எஃப் சி பார்சிலோனா, சபாடெல், லெவண்டே அணிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் அலெக்ஸியாவை ஒவ்வொரு முறையும் போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி ஏலத்தில் எடுத்தன.
சாதனை நாயகி!
தனது கால்பந்து வாழ்க்கையில் பார்சிலோனா அணிக்காக அதிகபட்சமாக 271 போட்டிகளில் விளையாடி 117 கோல் அடித்து அசத்தியிருக்கிறார். அதற்கு அடுத்ததாக, ஸ்பெயின் ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளில் 113 ஆட்டங்களில் விளையாடி தனிப்பட்ட முறையில் 50-க்கும் மேற்பட்ட கோல்கள் போட்டிருக்கிறார். 455 போட்டிகளில் விளையாடி இருக்கும் அலெக்ஸியா, தனிநபராக 175 முறை கோல் அடித்துள்ளார். இதனால், 2020-21 ஆம் ஆண்டு தொடரில் ஐரோப்பாவின் அதிக கோல் அடித்த மிட்ஃபீல்டர் விருதையும், இந்தத் தலைமுறையில் ஐரோப்பா கால்பந்து உலகின் மிகச் சிறந்த வீராங்கனை விருதையும் வென்றிருக்கிறார். எஃப் சி பார்சிலோனா கிளப் அணியின் மிகச்சிறந்த மிட்ஃபீல்டர், மிகத் துல்லியமாக கோல் அடிப்பதில் திறமைசாலி என்றெல்லாம் கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டினோ, ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா, ரிவால்டோ, பெண்கள் கால்பந்து வீராங்கனை லூயிசா நெசிப், ஒலிம்பிக் வீராங்கனை லியோனாய் போன்ற வீரர்களிடம் பாராட்டும் பெற்றவர்.
ரசிகர்களின் இதயத்துடிப்பு
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வீரர்களில் தற்போதும் முதன்மையாக இருப்பவர்கள் லியோன் மெஸ்ஸி, கிறிஸ்டினோ ரொனால்டோ, ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி என ஒரு சிலர் மட்டுமே. அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கும் ஒரே வீராங்கனை அலெக்ஸியா. கால்பந்து வீரர் ஒருவர் தான் விரும்பும் அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அலெக்ஸியாவின் ஆட்டத் திறமை, பந்தை கடத்தி செல்லும் நளினம், தனித்துவமான துடிப்பு, வேகம் ஆண்களுக்கு நிகராக இவரது ஆட்டத்தை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. 20 ஆண்டு காலமாக கால்பந்தே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு வரும் அலெக்ஸியா, ஸ்பெயின் நாட்டில் பிறந்தாலும் பார்சிலோனா அணியின் கேப்டன், அந்த அணியின் நடு கள (மிட்ஃபீல்ட்) இதய துடிப்பும் இவரே. எனவேதான், கால்பந்து உலகின் கவுரவமிக்க விருதுகளுக்கு இவரை ரசிகர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் ‘பாலன் டி ஆர்’ (பேலோன் தோர்), உலகின் மிகச்சிறந்த வீரர்களுக்கு ஃபிஃபா வழங்கும் சிறந்த வீராங்கனை விருதுகளையும் வென்றிருக்கும் அலெக்ஸியா உலகின் மிகப் பெரிய கால்பந்து நட்சத்திரமானார்.
இந்த விருதை பெற்றுக் கொண்ட அலெக்ஸியாவின் வாழ்வில் இந்தத் தருணமே மிகச் சிறப்பானது. தனக்கு பிறகும் இந்த விருதை நிச்சயம் பார்சிலோனா வீராங்கனைகள் பலர் வெல்வார்கள் என அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு பேலோன் தோர் விருது வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். உலக அளவில் இந்த விருதை வென்றிருக்கும் 3-ஆவது வீராங்கனை என்ற பெருமையை அலெக்ஸியா பெற்றிருக்கிறார். இந்த ஆட்டத்தில், அந்த அணிக்கு எதிராக கோல் அடிக்க சாத்தியமே இல்லை என்று கூறும் நேரத்தில் அத்தகைய சாத்தியமற்ற பந்தைத் தேர்வு செய்து கோல் அடித்து அசத்தி கால்பந்து உலகின் சிறந்த வீராங்கனை விருதை பெற்றிருக்கும் அவரது பயணம் மிக நீண்ட நெடியது. பெண்களை அழகுப் பொருளாக பார்க்கும் இந்த சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டி கம்பீரமாக நடைபோடும் அலெக்சிஸியாவை வாழ்த்துவோம்...
- சி.ஸ்ரீராமுலு