5 முறை உலக சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான பிரேசில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
32 அணிகள் பங்கேற்கும் 22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 3 அணிகள் எவை என்பது ஜூன் மாதம் தெரிய வரும்.
இந்நிலையில், இந்த போட்டியில் லீக் சுற்றில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் நேற்று முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடந்தது.
அதன்படி, போட்டியில் பங்கேற்கும் அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. 'ஏ 'பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, தகுதிச்சுற்று அணிகளும், 'சி ' பிரிவில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து அணிகளும், 'டி' பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, தகுதிச்சுற்று அணிகளும், 'இ' பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், தகுதிச்சுற்று அணிகளும், 'எப் ' பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா அணிகளும், 'ஜி ' பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன் அணிகளும், 'எச் 'பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.