games

img

தேசிய சீனியர் தடகளம்: உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்!

தேசிய தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேசினா தங்கப்பதக்கம் வென்றார்.  

மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தேசிய தடகள போட்டிகள் 61ஆவது சீசன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  முதல் 3 நாள் போட்டி முடிவில் தமிழக அணி 4 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கம் வென்று இருந்தது. 4ஆவது நாளான நேற்று தமிழகத்துக்கு 5ஆவது தங்கம் கிடைத்துள்ளது.  

அதில், பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் அதிகபட்சமாக 1.82 மீ., வரை தாண்டிய தமிழகத்தின் கிரேசினா மெர்லி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை ரூபினா யாதவ்(1.78 மீ.,), கேரளாவின் ஏஞ்சல் தேவாசியா(1.76 மீ.,) கைப்பற்றினர்.          

பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி. கனிமொழி தங்கப்பதக்கம் பெற்றார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா வெண்கல பதக்கம் பெற்றார்.  

ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழரசு, இலக்கியதாசன், விக்னேஷ், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது.  

பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட (13.70 மீ.,) கூடுதலாக தாண்டிய இவர், புதிய சாதனை படைத்தார். மேலும் காமன்வெல்த் விளையாட்டுக்கும் தகுதி பெற்றார்.  முன்னதாக 2011 ஆம் ஆண்டு கேரள வீராங்கனை மயூகா ஜானி 14.11 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜஸ்வர்யா நேற்று தகர்த்தார்.  

பெண்களுக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை நவ்ஜீத் கவுர் 55.67 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கமும், அரியானா வீராங்கனை நிதி ராணி 50.86 மீட்டர் தூரம் வரை எரிந்து வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை காருண்யா 49.24 மீட்டர் தூரம் வரை எரிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.  

ஆண்களுக்கான வட்டு எறியும் போட்டியில் பஞ்சாப் வீரர் கிர்பாலசிங் 60.31 மீட்டர் தூரம் எறிந்து தனது சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். முன்னதாக 2016 ஆம் ஆண்டு அவர் 59.74 மீட்டர் தூரம் வரை எறிந்ததே சாதனையாக இருந்தது.