facebook-round

img

உடலும் மனமும் உணர்வால் சிவந்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!

அவர்கள் ஓடி வருகிறார்கள்

காடுகளைத் தாண்டி

கடிய மலைகளைக் கடந்து

ஆறுகளைத் தாண்டி

அவர்கள் ஓடி வருகிறார்கள்!

வயலாரிலிருந்து கண்ணூர் வரை

அவர்கள் ஓடியபடி வருகிறார்கள்

வேள்பாரி சொன்னதைப் போல

அவர்களின் ஓட்டத்தின் போது

பின்னால் வரும் கால்களை

முன்னோடும் கால்களே இயக்கும்

எப்படி இத்தனை தூரம் ஓடுகிறார்கள்

மராத்தான் மாவீரர்களா அவர்கள்?

அவர்களது எளிய கால்களை

அப்புவும் சிறுகண்டனும்

குஞ்ஞாம்புவும் இயக்குகிறார்கள்!

தெலுங்கானா வீரத் தியாகிகள்

கையூரின் சிவப்பு மைந்தர்கள்

தேபாகா, வோர்லி, புன்னப்புராவின்

புகழ்மிக்க தியாகிகளை நெஞ்சிலேந்தி

குருதி தோய்ந்த செங்கொடியை

தங்கள் கைகளில் ஏந்தியவாறே

அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்

அங்கே மலைகளின் நடுவில்

அங்கே இலைகளின் மறைவில்

அபிமன்யுக்கள் கையசைத்து

அவர்களை வாழ்த்தியிருப்பார்கள்!

எனவே அவர்கள்...

விசைகொண்டு ஓடுகிறார்கள்

கண்ணூர் வரையிலும் - அவர்கள்

ஓடிக்கொண்டே இருப்பார்கள்

உடலும் மனமும் உணர்வால் சிவந்து

அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்!

- சூர்யா, சென்னை.