facebook-round

img

கம்யூனிஸ்டுகள் மக்களை வாக்கரசியலுக்காக திட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்

கம்யூனிச தோழர்களை தவிர்த்து விட்டு ஒரு சமூகத்தை நினைத்து பார்க்குமளவு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்தவனும் நானில்லை, கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு புரட்சித்தன்மை வருவதையொட்டி வலிய தன்னை கம்யூனிஸ்டாக காட்டிக்கொள்ளும் பின்புலத்தில் பிறந்தவனும் இல்லை.

இந்த மண்ணில் கம்யூனிசத்தால் சாத்தியமான சமூக மாற்றங்களும், போராட்டங்களும், சாமானிய மக்களுக்குமான குரல்களும் கணக்கில் அடங்காதவை!

கீழ்வெண்மணி போராட்டமும் அதிலொன்று. தோழர்கள் இல்லாமல் போயிருந்தால் அரசியல் ஆதரவு நாதியற்ற சமூகங்களில் ஒன்றாய் இங்கு பலபேர் போயிருக்கக்கூடும், முழுமையான அரசியல் அதிகாரம் சாத்தியப்படாமல் போயிருந்தாலும் தோழர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரச்சனைகளும், குரல்களும், ஆதரவுக்கரமும் நமக்கு உணர்த்தியது ஒன்று தான். ஆட்சி அதிகாரமில்லாமலேயே இவ்வளவு சாதிக்க முடியுமா என்கிற பிரமிப்பு!

“ஒட்டு போடுங்க, செய்யுறோம்” என்கிற திமிர் தொனியில்லாமல், மக்களுக்கான பிரச்சனைகளை முன்னெடுக்கும் அந்த தன்மையை எந்த முற்போக்கு இயக்கங்களும் கம்யூனிஸத்தில் இருந்து உள்வாங்கிக்கொள்ள வேண்டியது. கம்யூனிஸ்டுகள் மக்களை வாக்கரசியலுக்காக திட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள், மக்கள் என்றுமே ஆட்டுவிக்கப்படுகிறவர்கள் என்கிற உண்மையை விளங்கிக்கொண்டவர்கள்!

கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட தினம்!

 

வாசுகி பாஸ்கர்