யார் நீ?...நீ யாரு?...
ஹர் ஹர் மகாதேவ், ஹர் ஹர் மகாதேவ், ஹர் ஹர் மகாதேவ்..
என்ன அத்தாட்சி இருக்கிறது?அத்தாட்சி?...
என்னுடைய பெயர் தரம்சந்த்
இது அத்தாட்சியே இல்லை..
சரி, வேதங்களிலிருந்து எதை வேண்டுமானாலும் கேட்கலாம்..
எங்களுக்கு வேதங்கள் தெரியாது. எங்களுக்கு தேவை அத்தாட்சி
என்ன அத்தாட்சி வேண்டும்?
உன் பைஜாமா நாடாவை அவிழ்த்து விடு
அவன் தன் பைஜாமாவை இறக்கியவுடன், அங்கு பெரும் குழப்பம் உண்டாயிற்று.
அவனைக் கொல்லு,அவனைக் கொல்லு...
கொஞ்சம் பொறுங்கள், தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள்... நான் உங்களில் ஒருவன். உங்களின் சகோதரன்... பகவான் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் உங்களின் சகோதரன்.
அப்படி என்றால் இதற்கு என்ன அர்த்தம்?
நான வந்துக்கொண்டிருந்த பகுதி நம்முடைய விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால், வேறு வழியில்லாமல் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று... வேறு எதற்குமில்லை. என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள... இது ஒன்றுதான் நான் செய்த தவறு. மற்றது எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது.
அந்தப் பிழையை வெட்டியெறிங்கள்.
அந்தப் பிழை வெட்டி யெறியப்பட்டது. அதுபோலவே தரம்சந்தும்.