facebook-round

img

தங்கள் புரிதல் தவறானது முதலமைச்சர் அவர்களே!

தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் நேற்றைய 2 கருத்துக்கள் மிக முக்கியமானவை.

ஒன்று NRC க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார். இது ஒரு வரவேற்கத்தக்க நல்ல அம்சம் .

ஆனால் இரண்டாவதாக NPR குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கருத்து அந்தப் பிரச்சினை குறித்து முதலமைச்சர் போதிய கவனத்தை செலுத்தவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

NPR கணக்கெடுப்பின்போது எந்த மட்டத்திலும் அதற்கான ஆவணங்களை கேட்பதாக மத்திய அரசாங்கம் என்பிஆர் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிக்கவே இல்லை .அதனால்தான் CAA_NRC_NPR எதிர்ப்பு போராட்டங்களில் NPR கேள்விகளுக்குப் பதில் அளிக்க மாட்டோம்; NRC க்கு ஆவணம் காட்ட மாட்டோம் என்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த வழிகாட்டுதலில் இருப்பது என்னவென்றால் NPR குறித்த கேள்விகளை கணக்கெடுப்பு நடத்த வருகிறவர்கள் கேட்பார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதை எழுதிக் கொண்டு சென்றுவிடுவார்கள் .ஆனால் அதில் திருப்தி அடைவது திருப்தி அடையாமல் இருப்பது அதனடிப்படையில் சந்தேகத்திற்குரியவர் என்று எழுதுவது என்பதெல்லாம் அந்த அதிகாரியின் கையில் இருக்கக்கூடிய அதிகாரம். கேள்வி கேட்கும்போது எதையும் அவர்கள் நிரூபிக்க சொல்லப் போவது கிடையாது. பின்னர் NRC யோடு இணைக்கும்போது அதற்கு முன்பாக NPR குறித்த விவரங்களை வெளியிடும் போது மட்டும்தான் சந்தேகத்திற்குரிய வரா இல்லையா என்பது தெரியவரும்.

எனவே மத்திய அரசாங்கம் NPR கணக்கெடுப்பின்போது ஆவணங்களை கேட்க மாட்டோம் என்று சொல்வது புதிதான அறிவிப்பு போலவும் எனவே தான் எழுதிய கடிதத்திற்கு ஆவணங்கள் கேட்கப்போவதில்லை என மத்திய அரசு சொல்லி விட்டதாகவும் எனவே அதில் பிரச்சனை ஏதுமில்லை என்று தான் கருதுவதாகவும் முதலமைச்சர் சொல்லியிருப்பது முற்றிலும் தவறான புரிதல்.

பீகார் போன்ற மாநிலங்களில் NPR அமல்படுத்துவோம் ஆனால் கூடுதலாக இருக்கிற கேள்விகளை கேட்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தெலுங்கானாவில் NPR ஐ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் முதலமைச்சர் NPR குறித்த நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் .
-Kanagaraj Karuppaiah