election2021

img

மேற்கு வங்கம்.... இளைஞர்களின் கட்சி....

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு களத்தில் இறங்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. வயதான மனிதர்களின் கட்சி என்றவிமர்சனத்தை எதிர்கொண்ட மேற்கு வங்க சிபிஎம்,இந்த முறை பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்களாக 40 வயதுக்கும் குறைவானவர்களை களமிறக்கியுள்ளது. 2020 ஜனவரியில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு) வளாகத்தில் (ஆர்எஸ்எஸ்- பாஜக குண்டர்களால்) ஏவப்பட்ட வன்முறையில் காயமடைந்த பின்னர், தேசிய அளவில் வெளிச்சத்திற்கு வந்த அயிஷே கோஷ் தேர்தலில் சிபிஎம் சார்பில் களம் காண்கிறார்.

இதேபோல், இந்த முறை மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கக்கூடிய இரண்டு இடங்களான சிங்கூர் மற்றும் நந்திகிராமில் இருந்து முறையே மற்றொரு ஜேஎன்யு மாணவர் பேரவை தலைவரான தீப்ஷிதா தர் மற்றும் மாணவர் - வாலிபர் சங்கத் தலைவர்கள் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மற்றும் மீனாட்சி முகர்ஜி ஆகியோருக்கு கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்பதை உறுதி செய்வதற்கான முடிவு ஒரு மாதத்திற்கு முன்பு கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், இளைஞர்களிடையே சிபிஎம் புகழ் குறைந்து வருவது, அதன் வாக்குப் பங்கைக் குறைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளது.31 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய கட்சி உறுப்பினர்களின் சதவீதம் 2015-இல் 13.5% ஆக இருந்து 2020-இல் 7.68% ஆகக்குறைந்துவிட்டது என்று அக்கட்சி எடுத்த சமீபத்திய ஆய்வு உணர்த்தியுள்ளது. இதனால், இளைஞர்களுக்கு இடம் வழங்குவது இந்த போக்கை மாற்றியமைக்கும் என்று கட்சி நம்புகிறது. இதனாலேயே இளைஞர்களுக்கு இந்த முறை அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதேபோல், சிபிஎம் தனது பிரச்சார தந்திரங்களையும் முழக்கங்களையும் மாற்றியுள்ளது. வங்கத்தில் புகழ்பெற்ற  ‘தும்பா சோனா’ எனப்படும்பிரபல பாப் பாடலை ரிமேக் செய்து தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. பாடல் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அதனை பார்த்துள்ளனர். இதனால் சிபிஎம் தொடர்பான போஸ்டுகள், நேர்மறை விமர்சனங்கள் இணையத்தில் அதிகமாக தென்பட தொடங்கியுள்ளது.

இதைவிட, பிப்ரவரி 28 அன்று கொல்கத்தா பிரிகேட் பரேடு மைதான பேரணிக்குப் பிறகுசிபிஎம் அதிகமாக பேசப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்களிடையே அதிகமாக விவாதிக்கப்படு கிறது. அதற்கு காரணம், பிரிகேட் மைதான பேரணிக்கு கூடிய கூட்டம். சிபிஎம் தலைவர்கள் தங்கள் முயற்சிகள் இந்த நேரத்தில் சில வியக்கத்தக்க மாற்றங்களை விளைவிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதுவே இளைஞர்களை காலப்போக்கில் அடுத்த தலைமுறை தலைவர்களாக படிப்படியாக முதிர்ச்சியாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதையே தங்களின் நீண்ட கால திட்டமாக கொண்டு செயல்படப்போவதாக கூறியுள்ளனர்.

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டாக்டர் சுஜன் சக்ரவர்த்தி, “நாங்கள் எப்போதும் இளம் தலைவர்களை வாக்குகளின் பார்வையில் இருந்து மட்டுமல்ல, இயக்கத்தை வழிநடத்தும் பார்வையிலும் நடத்துகிறோம். புத்ததேவ் பட்டாச்சார்யா, அனில் பிஸ்வாஸ், பிமன் பாசு, ஷியாமள் சக்ரவர்த்தி, சுபாஷ் சக்ரவர்த்தி போன்றவர்கள் அத்தகைய செயல்முறையின் மூலம் தலைவர்களாக உருவெடுத்தனர். இது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நேரத்தில் எங்களுக்கு அதிகமான இளம் முகங்கள் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. எதிர்க்கட்சியில் இருக்கும்போது, ஒருவர் எப்போதும் இளைஞர்களை அதிக எண்ணிக்கை யில் ஈர்ப்பார். அந்த வாய்ப்பை எதிர்காலத்திற்காக நாங்கள் பயன்படுத்துகிறோம். மம்தா பானர்ஜி யின் “ஊழல் ஆட்சி” மற்றும் பாஜகவின் “வகுப்புவாத” மற்றும் “உழவர் எதிர்ப்பு” போன்றவற்றால், மேற்கு வங்க மக்கள் ஒரு மாற்றத்தை தேடுகிறார்கள். புதிய, ஊழல் இல்லாத மற்றும் நம்பகமான கட்சியின் இளைஞர் முகங்களின் மூலமாக இந்த மாற்றத்தை அவர்கள் காண்பார்கள்” என்றார்.

மம்தா பானர்ஜி மற்றும் சுவேந்து அதிகாரிக்கு எதிராக நந்திகிராமில் களம் கண்டுள்ள மீனாட்சி முகர்ஜி வாக்காளர்களிடம், “தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உணவு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளை இயக்கங்கள் மூலம் செய்வேன். நான் கடைசி மூச்சு வரை சிவப்புக் கொடியை விட்டு வெளியேற மாட்டேன்” என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். “நீங்கள் என்னை தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் தொகுதி எம்எல்ஏ ஊழல் செய்தேன் என நீங்கள் தலைகுனியும்படி ஒருபோதும் நடந்துகொள்ளமாட்டேன்’’ என்று கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இவரைப்போல தான் மேற்கு வங்க சிபிஎம் களத்தில் இருக்கும் இளம் வேட்பாளர்கள் சித்தாந்தம் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் இடதுசாரிகளின் நம்பகத் தன்மையை சொல்லி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். இந்த முறை இவர்களால்சிபிஎம் தலைமையிலான இடது ஐக்கிய முன்னணி கவனிக்கப்படக்கூடிய கூட்டணியாக மாறி இருக்கிறது.

நன்றி : புதிய தலைமுறை தொலைக்காட்சி

 

;